இந்திய மக்கள் இன்னும் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் வங்கி கடன் மோசடி செய்தியின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராத நிலையில், இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியைக் கப்பல் கட்டுமான நிறுவனமான ஏபிஜி ஷிப்யார்ட் செய்துள்ளது.
ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் செய்த 22842 கோடி ரூபாய் வங்கி மோசடி மூலம் வங்கி பங்குகள் தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் நிலையில்,ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத் தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பிக்கக் கூடாது என்பதற்கான லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
ABG ஷிப்யார்டு நிறுவனம்
ABG ஷிப்யார்டு நிறுவனம் சுமார் 28 வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் சுமார் 22,842 கோடி ரூபாய் அளவிலான பணத்தைக் கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடியாக விளங்குகிறது. சிபிஐ அமைப்பு ABG ஷிப்யார்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது.
லுக்அவுட் நோட்டீஸ்
சுமார் 23,000 கோடி ரூபாய் அளவிலான வங்கி கடன் மோசடி வழக்கில் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகள் தேடப்பட்டு வரும் நிலையில் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தப்பியோட்டம்
அமலாக்க அதிகாரிகளால் தேடப்படும் எந்தவொரு நபரும் விமான நிலையங்கள், துறைமுகம் வாயிலாக நாட்டின் எல்லை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.
விஜய் மல்லையா,
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் இத்தகைய லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடுவதற்கு முன்பாகவே நாட்டை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் மோசடியில் 5க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில் இவர்களின் இருப்பிடம் என்ன என்பது தான் முக்கியக் கேள்வியாக உள்ளது.
5 உயர் அதிகாரிகள்
ABG ஷிப்யார்டு நிறுவனத்தின் மீதான 22,842 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் இந்நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால், ரவி விமல் நெவெடியா ஆகியோரும் சிபிஐ பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில் இடம்பெற்று உள்ளனர்.
98 நிறுவனங்கள்
ABG ஷிப்யார்டு நிறுவனம் சுமார் 28 வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் பெற்ற 22,842 கோடி ரூபாய் அளவிலான கடனை குறைந்தபட்சம் 98 நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.