வீட்டில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் கேஒய்சியை முடிக்க நாளையே கடைசி நாளாகும். ஏற்கனவே ஒரு முறை கடைசி தேதி நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் ஒரு முறை கடைசி தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் ஹெச்பி (HP Gas) ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது எல்பிஜி இணைப்பிற்கான இ-கேஒய்சி (e-KYC) பணிகளை முடிக்க ஆகஸ்ட் 23ஆம் தேதி அதாவது நாளையே கடைசி நாளாகும்.

நாளைக்குள் இதனை முடிக்கவில்லை என்றால், உங்கள் கேஸ் மானியம் நிறுத்தப்படலாம், சிலிண்டர் முன்பதிவு செய்யமுடியாமல் போகலாம். ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து மத்திய அரசு சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக போலி இணைப்புகளை நீக்கும் வகையில் கேஒய்சி-ஐ கட்டாயமாக்கியுள்ளது.
இதற்கான முதல் காலக்கெடு முடிந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரும் சர்வர் பிரச்சினை என கூறியதால் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இந்த அவகாசமும் நாளையுடன் முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி எளிதாக இந்த இ-கேஒய்சி-யை முடித்துவிடலாம்.
இதற்கு ஆதார் அட்டை , எரிவாயு இணைப்புடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், எல்பிஜி நுகர்வோர் எண் , எல்பிஜி ஐடி ஆகிய விவரங்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனில் அந்தந்த நிறுவனத்தின் செயலி மற்றும் Aadhaar FaceRD செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
நீங்கள் இண்டேன் பயனர்கள் எனில் IndianOil ONE செயலியை தரவிறக்கம் செய்து லாகின் செய்யவும். உங்கள் எல்பிஜி கணக்கை இணைத்த பிறகு, இ-கேஒய்சி என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, அதில் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளவும். இதற்காக Aadhaar FaceRD செயலி மூலம் முகத்தை ஸ்கேன் செய்து சரிபார்க்க வேண்டும்.
பாரத் கேஸ் வாடிக்கையாளார்கள் Hello BPCL செயலி மூலம் லாகின் செய்து, உங்கள் இணைப்பை தேர்ந்தெடுத்து, இ-கேஒய்சி பிரிவுக்கு செல்லவும். அங்கு ஆதார் முக சரிபார்ப்பை முடிக்கவும். ஹெச்பி வாடிக்கையாளர்கள் HP Pay செயலியை பயன்படுத்தி, லாகின் செய்த பின், இ-கேஒய்சி என்பதை கிளிக் செய்து அடையாள சரிபார்ப்பை முடிக்கவும்.
ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றால், உடனடியாக உங்கள் இணைப்பு ரத்து செய்யப்படாது. ஆனால், உங்கள் எல்பிஜி இணைப்பு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த சரிபார்ப்பை முடிக்கும் வரை சிலிண்டர் மானியம் கிடைக்காமல் போகலாம், சிலிண்டரே புக் செய்ய முடியாத நிலை கூட உண்டாகலாம். எனவே, இந்த சிக்கல்களை தவிர்க்க, கடைசி நாள் வரை காத்திருக்காமல் கேஒய்சி பணிகளை முடிப்பது நல்லது.


Click it and Unblock the Notifications

