ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கேஸ் விலை உயர்வு ஒருபுறம் என்றால் கேஸ் புக்கிங் செய்வதற்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல புதிய கனெக்சன் பெறுவது, சிலிண்டர் முன்பதிவு செய்து பெறுவது என அனைத்திற்குமே தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் இன்னும் சில கடுமையான விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. மக்கள் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான வீடுகளில் தற்போது கேஸ் அடுப்பு தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே எல்பிஜி கேஸ் சிலிண்டர் தொடர்பான எந்த ஒரு மாற்றங்களும் நேரடியாகவே சாமானிய மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில் ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வீட்டுக்கு ஒரு கனெக்ஷன் கொள்கை (One Home, One Connection Policy): மத்திய அரசு மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இரட்டை இணைப்புகளை தடுக்க புதிய விதியைக் கொண்டு வருகின்றன. உங்கள் வீட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு இருந்தால், நீங்கள் LPG கேஸ் சிலிண்டர் இணைப்பை வைத்திருக்க முடியாது. ஜூன் மாதம் முதல் இந்த விதிமுறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே நீங்கள் பிஎன்ஜி இணைப்பு வைத்திருந்தால் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை சரண்டர் செய்துவிட்டு அதற்கான வவுச்சரை பெற்று கொள்ள வேண்டும். பின்னர் உங்களுக்கு எல்பிஜி இணைப்பு தேவைப்படும் போது இந்த வவுச்சரை வைத்து இணைப்பு பெற்று கொள்ளலாம். ஒரு வேளை பிஎன் ஜி இணைப்பு பெற்ற பின்னரும் எல்பிஜி இணைப்பை சரண்டர் செய்யாமல் இருந்தால் கேஸ் சிலிண்டர் சப்ளை மற்றும் புக்கிங் தானாகவே நிறுத்தப்படும்.
LPG சிலிண்டர் புக்கிங் : ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டர் புக் செய்வதற்கான கால இடைவெளி அண்மையில் மாற்றப்பட்டது. அதுவே ஜூன் மாதமும் நீடிக்கப்போகிறது. நகரப் பகுதிகளில் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டரை புக் செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அடுத்த சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் கால இடைவெளி கட்டாயம்.
KYC விதிமுறைகள்: சிலிண்டர் எரிவாயு மானிய முறைகேடுகளைத் தடுக்கவும், முறையான வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் சென்றடைவதை உறுதி செய்யவும் KYC செய்வது கட்டாயம். இது செய்யப்படவில்லை என்றால் சிலிண்டர் இணைப்பே கூட நிறுத்தப்படலாம். குறிப்பாக உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகள் தங்களின் KYC விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும்.
சிலிண்டர் விலை : வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சவூதி அராம்கோ விலையைப் பொறுத்து வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கும். இந்த மாதமும் ஜூன் 1 அன்று புதிய விலை விவரங்கள் வெளியாகும். விலை உயர்த்தப்படலாம், குறைக்கப்படலாம் அல்லது மாற்றாமலும் இருக்கலாம், இதில் எதில் நடந்தாலும் நம் பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications

