லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காலம் முடிவதற்குள், இந்த இணைப்பு நடவடிக்கை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சற்று முன்பு தான் ஒரு கட்டுரையில் படித்தோம், 94 வருட பழமையான ஒரு தமிழக வங்கியின் இரண்டு வருட மோசமான பின்னடைவுக்கும், நெருக்கடிக்கும் முடிவு வந்ததாக படித்தோம்.
இது நிதி நெருக்கடியில் உள்ள வங்கியினை மேம்படுத்த உதவும். இதனால் 94 ஆண்டுகால பழமையான வங்கி திவால் நிலைக்கு தள்ளப்படுவதில் இருந்து மீளும் என்றெல்லாம் படித்தோம்.
ரிசர்வ் வங்கியினை அணுக திட்டம்
ஆனால் தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம், பெரு நிறுவன முதலீட்டாளர்கள் இப்போது இந்திய ரிசர்வ் வங்கியை அணுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று, ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கிக்கு கடுமையான கட்டுபாடுகளை விதித்தது. இதன் மூலம் வங்கியில் இருந்து அத்தியாவசியம் தவிர மற்றவர்கள் 25,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும். லட்சுமி விலாஸ் வங்கியின் நெருக்கடியான நிலையினை சமாளிக்கவே, இந்த அதிரடி முடிவுகள் என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டது.
முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
ஏனெனில் இந்த ஒருங்கிணைப்பு வரைவுத் திட்டத்தின் மூலம் இவ்வங்கியின் பழைய நிர்வாகம் இருக்காது. மேலும் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதன் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் டீலிஸ்ட் செய்யப்படலாம். நெருக்கடியான காலகட்டத்தில் வங்கியுடன் இருந்த பங்குதாரர்களும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் ஆர்வமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை
பல தலைமுறைகளை தாண்டிய ஒரு பாரம்பரிய வங்கியில், பலர் வைப்பு நிதியாளர்களாகவும், பங்குதாரர்களாகவும் உள்ளனர், எனவே வங்கியின் சில்லறை மற்றும் நிறுவன பங்குதாரர்களை பாதிக்கும் வகையில் எந்த முடிவுகளும் வேண்டாம் என ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொள்கிறோம் என்று ஒரு முதலீட்டாளர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மாற்று வழியை பின்பற்றலாம்
மேலும் முதலீட்டாளர்கள் லட்சுமி வங்கிக்கு மாற்று வழியை பரிந்துரைத்துள்ளனர். இதனை ஏல முறையில் செயல்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதன் மூலம் நியாயமான மதிப்பீட்டை அடைவதற்கும், பங்குதாரர்களின் நஷ்டத்தினை தடுப்பதற்கும் ஒரு சுயதீன மதிப்பீட்டாளரை நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கருத்துகளை சொல்லலாம்
ரிசர்வ் வங்கியின் இந்த வரைவு திட்டத்தை அறிவிக்கும் போது ரிசர்வ் வங்கி, நவம்பர் 20-க்குள் இந்த திட்டம் குறித்து கருத்து கோரியுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் தங்களது கோரிக்கைகளையும், கருத்துகளையும் ரிசர்வ் வங்கியிடம் கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தரகு நிறுவனங்கள் எச்சரிக்கை
இதற்கிடையில் பல தரகு நிறுவனங்களும் இவ்வங்கி பங்கின் விலை பூஜ்ஜியத்தினை கூட தொட வாய்ப்புள்ளது. ஆக இதில் வாங்குவதை எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்துவது போல் இவ்வங்கி பங்கின் விலை அதே 20% சரிவில் 12.40 ரூபாயாகவே காணப்படுகிறது.
யாரிடம் எவ்வளவு பங்கு?
இதற்கிடையில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளில், 46.7 சதவிதம் தனியார் முதலீட்டாளர்களிடமும், 1.6% LICயின் வசமும் உள்ளது. சர்வதேச முதலீட்டாளர் வசம் 8.65% பங்குகள் உள்ளன. லட்சுமி விலாஸ் வங்கி PROMOTERகளிடம் 6.8% பங்குகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 93.2 சதவிதம் பங்குகள் வெளிநபர்களிடம் தான் உள்ளன. இதற்கிடையில் தான் லட்சுமி விலாஸ் வங்கி DBS வங்கியுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.