கொல்கத்தா: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின், செயல்பாட்டுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Recommended Video
இந்த அதிரடி நடவடிக்கையானது ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது.
இதற்கிடையில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரையில் இவ்வங்கியின் நடவடிக்கையை கண்கானிக்க, அதன் நிர்வாக அதிகாரியாக கனரா வங்கியின் முன்னாள் தலைவர் டி என் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர் நஷ்டம்
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வாராக்கடன் அதிகரித்து வரும் நிலையில், இந்த வங்கி கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், லட்சுமி விலாஸ் வங்கியின் இழப்பு 396 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த காலாண்டில் மட்டும் அல்ல, தொடர்ந்து பல காலாண்டுகளாக பெரும் நஷ்டத்தினையே இவ்வங்கி கண்டு வருகிறது.
எல்விபி-யின் தேடல்
லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இழப்பை சமாளிக்கும் வகையில், அதை வாங்கக் கூடிய ஒரு நிறுவனத்தை அந்த நிர்வாகம் தேடி வந்தது. ஆனால், ஓராண்டுகளுக்கும் மேலாக ஆகியும் அந்த முயற்சிக்கு சரியான பலன் கொடுக்கவில்லை எனலாம். ஏனெனில் கடந்த ஆண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் என்ற தனியார் வீட்டுவசதி நிறுவனத்துடன், வங்கியை இணைக்க லட்சுமி விலாஸ் நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக ரிசர்வ் வங்கியையும் நாடியது. ஆனால் இதன் பின்னர் ரிசர்வ் வங்கி இதனை நிராகரித்தது.
டிபிஎஸ் வங்கியை பரிந்துரை
லட்சுமி விலாஸ் வங்கியின் இந்த முதல்முயற்சிக்கு பிறகு, கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சியும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே தற்போது சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் (DBS)உடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்கும் வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு இந்திய வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி யோசிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் யாருக்கு எவ்வளவு பங்கு?
லட்சுமி விலாஸ் வங்கியில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் 4.99 சதவீதம், பிஇ ஃபண்ட் ஜூப்பிட்டர் கேப்பிடல் நிறுவனம் 1.08 சதவீதம், ஸ்ரீ இன்ஃப்ரா ஃபைனான்ஸ் 3.34 சதவீதம், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் 3.82 சதவீதம், எல்ஐசி 1.62 சதவீதம் பொதுப்பிரிவின் கீழ் பங்குகளை வைத்துள்ளன.
இணைப்பு கைகொடுக்காது
கடந்த ஜூன் 2017ல் லட்சுமி விலாஸ் வங்கியில் அதன் பங்கு விலை 187 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் இன்று 20% வீழ்ச்சி கண்டு லோவர் சர்கியூட் ஆகியுள்ள நிலையில், தற்போது 12.40 ரூபாயாக உள்ளது. இதற்கிடையில் நிபுணர்கள் லட்சுமி விலாஸ் வங்கி + டிபிஎஸ் இணைப்பு என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையாது. ஏனெனில் லட்சுமி விலாஸ் அதன் மதிப்பினை குறைத்துவிட்டது. இதன் காரணமாக பங்குகள் சரிந்துள்ளது. இது இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் முதலீட்டாளர்களுக்கு இந்த இணைப்பு கைகொடுக்காது. ஏனெனில் ஏற்கனவே இந்த பங்கின் விலையானது 12.40 ரூபாய்க்கு வந்துள்ளது. ஆக இனி இழப்பதற்கு பெரிதும் ஒன்றுமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.