லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கிக்கான இணைப்புக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், நிர்ணயம் செய்யப்பட்ட நவம்பர் 27ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் அனைத்தும் DBS வங்கி கிளையாக இயங்க துவங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இதே நாளில் ரிசர்வ் வங்கி கோரிக்கை மூலம் லட்சுமி விலாஸ் வங்கி மீது அறிவிக்கப்பட்ட ஒரு மாத மோராடோரியம் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது.
வங்கி இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் எதிரொலியாக லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளை வர்த்தகம் செய்ய நவம்பர் 26ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தை
இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கி இணைப்பிற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நவம்பர் 25ஆம் தேதி வர்த்தக முடிவிற்குப் பின் அதாவது நவம்பர் 26ஆம் தேதி முதல் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என NSE தெரிவித்துள்ளது.
ஒப்புதல்
லட்சுமி விலாஸ் வங்கியையும் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் பணத்தைக் காப்பாற்றவும் லட்சுமி விலாஸ் வங்கியைச் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட DBS வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டது.
இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கிகள் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இணைப்பிற்கான பணிகள் இன்று முதல் துவங்கப்படுகிறது.
நிர்வாக மாற்றம்
இந்த இணைப்பு மூலம் லட்சுமி விலாஸ் வங்கியின் கிளைகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்குகள், வைப்பு நிதிகள் எனச் சகலமும் எவ்விதமான மாறுதல் இல்லாமல் மொத்தமும் DBS வங்கி கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.
இந்திய வங்கித்துறை
இந்தியாவில் சில முக்கிய வங்கிகளே அதிகளவிலான வாராக்கடன் பிரச்சனையில் தவித்து வரும் காரணத்தால் இந்த வங்கி இணைப்புத் திட்டம், குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளுடன் இணைக்கும் திட்டம் இந்திய வங்கித்துறைக்குப் பெரிய அளவிலான நம்பிக்கையை அளித்துள்ளது.