இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது மொத்த கவனத்தையும் நியூ எனர்ஜி பிரிவு மீது திருப்ப முடிவு செய்தார். இதனால் டெலிகாம் பிரிவு மொத்தமாக ஆகாஷ் அம்பானி கட்டுப்பாட்டிலும், ரீடைல் பிரிவு மொத்தமாக ஈஷா அம்பானி நிர்வாகத்தின் கீழ் வந்தது.
ரிலையன்ஸ் ஜியோ தற்போது 5ஜி சேவை விரிவாக்க பணிகளைச் செய்து வரும் நிலையில் சமீபத்தில் 4 மாநிலத்தில் 10 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து மொத்த 85 நகரத்தில் 5ஜி சேவை அளிக்கும் காரணத்தால் 61 ரூபாய் மதிப்பிலான Add-On திட்டத்தை அறிமுகம் செய்து தனது வெற்றிப் பாதையில் வேகமாகப் பயணித்து வருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் தான் பல பணிகள் பாதியிலும், இறுதி முடிவுகள் எடுக்கப்படாமல் உள்ளது, இதில் முக்கியமாகச் சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றிய Metro AG நிறுவனம் எப்படி இருக்கப் போகிறது என்ற முடிவை எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியாவில் இயங்கி வரும் மொத்த விலை விற்பனை நிறுவனமான மெட்ரோ ஏஜி நிறுவனத்தை மொத்தமாக வாங்கியது. இந்த நிறுவனத்தைத் தற்போது ரிலையன்ஸ் மொத்த விலை விற்பனை கடைகளாக மட்டும் அல்லாமல் ரீடைல் விற்பனை கடைகளாகவும் இயக்க திட்டமிட்டு உள்ளது.
மெட்ரோ நிறுவனம்
மெட்ரோ நிறுவனம் பொதுவாகவே ஹோல்சேல் விற்பனை நிறுவனமாகும், அதாவது மெட்ரோவின் வாடிக்கையாளர்கள் மக்கள் இல்லை, வர்த்தக அமைப்புகள் தான். உதாரணமாகச் சிறிய கடைகள், ஹோட்டல், உணவகங்கள், சமையல் காண்டிராக்டர்கள், போன்ற அனைத்து வர்த்தக அமைப்புகள் தான்.
ஹோல்சேல் விற்பனை
இந்தியாவில் ஹோல்சேல் விற்பனையில் இந்திய அரசு 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் ஜெர்மன் நிறுவனமான மெட்ரோ இந்தியா வந்தது. இதனால் ரீடைல் பிரிவுக்கு இந்நிறுவனத்தால் செல்ல முடியாது.
ஹோல்சேல் டூ ரீடைல்
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மெட்ரோ நிறுவனத்தை இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வாங்குவதை இந்திய அரசும், சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புதல் அளித்த பின்பு ஹோல்சேல் பிரிவில் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
மார்ச்
இதனால் ரிலையன்ஸ் மெட்ரோ நிறுவனத்தின் கீழ் ரீடைல் வர்த்தகத்தைச் செய்ய முடியும், மேலும் மார்ச் மாதத்திற்குள் மெட்ரோ ஏஜி - ரிலையன்ஸ் ரீடைல் டீல் முடிவடையும்.
3 வருடம்
தற்போது செய்யப்பட்ட ஒப்பந்தம் கீழ் ரிலையன்ஸ் அடுத்த 3 வருடத்திற்கு மெட்ரோ பிராண்டின் கீழ் தான் வர்த்தகம் செய்ய வேண்டும். இந்த நிலையில் மார்ச் மாதம் கைப்பற்றல் நிறைவடைந்த பின்பு அனைத்து மெட்ரோ கடைகளையும் ஜியோமார்ட் கீழ் சேர்க்க உள்ளது.
ஜிஎஸ்டி பலன்கள்
இதேபோல் ரிலையன்ஸ் அனைத்து பொருட்களையும் ஹோல்சேல் மற்றும் ரீடைல் பிரிவில் விற்கும், பிஸ்னஸ் வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களுக்குத் தற்போது கிடைக்கும் ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். இதேபோல் ஹோல்சேல் பிரிவு வாடிக்கையாளர்களுக்குத் தற்போது இருக்கும் அனைத்து சேவைகளும் கிடைக்கும் எந கூறப்பட்டு உள்ளது.