இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையில் போட்டி அதிகமான நிலையில் சமாளிக்க முடியாமல் இந்திய வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம்.
இந்தியாவில் இருக்கும் அதன் கடைகள், பொருட்கள், வாடிக்கையாளர்கள், வர்த்தக ஒப்பந்தங்கள், சப்ளையர் டீல், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இதர கட்டமைப்புகள் என அனைத்தையும் விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தைக் கைப்பற்றப் பல போட்டிகள் இருந்தாலும் ஆரம்பம் முதல் பெரிய தலைகளின் பெயர் பிரதானமாக இருக்கிறது. ஆனால் இதே வேளையில் சில வெளிநாட்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ஆரம்பம் முதல் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ரீடைல் வர்த்தகத்தைத் தொடர்ந்து மெட்ரோ நிறுவனத்தின் வாயிலாக அதன் wholesale வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு மெட்ரோ நிறுவனத்தைக் கைப்பற்றப் போட்டிப்போட்டு வருகிறது.
மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம்
மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம் தான் இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்வதாக அறிவித்த போது அம்பானி மற்றும் அதானி நிறுவனங்கள் போட்டி போட்டது. ஆனால் தற்போது தாய்லாந்து நிறுவனம் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
CP குரூப்
தாய்லாந்து நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் Charoen Pokphand (CP) குரூப் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை வாங்க சுமார் 8000 கோடி ரூபாய் அதாவது 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முன்வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் மெட்ரோ நிர்வாகம் எதிர்பார்த்த தொகையும் இது தான்.
மெட்ரோ நிர்வாகம்
2 வாரத்திற்கு முன்பு மெட்ரோ நிர்வாகம் தனது வர்த்தகம், வளர்ச்சி வாய்ப்புகள், நிறுவனத்தின் செயல்திறன் அளவீடுகளை ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் CP குரூப்-க்குத் தனியாகப் பிரசன்டேஷன்-ஐ காட்டியது. இதே வேளையில் இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க மெட்ரோ-வை நிர்ப்பந்தம் செய்து வருகிறது லாபி குரூப்கள். காரணம் அன்னிய முதலீட்டு ஒப்புதலில் தாமதம் ஏற்படலாம் என்பதால்.
31 கடைகள்
2021 ஆம் ஆண்டில் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம் சுமார் 6,738.3 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம் சுமார் 31 கடைகளை வைத்துள்ளது.