பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குப் பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனை மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ள வேளையிலும், அரசு நிறுவனங்களை விற்பனை செய்து தனியார்மயமாக்கல் திட்டத்தில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே மோடி அரசு, நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்க முடிவு செய்தது.
இந்தத் திட்டத்தைச் சிறப்பாக நடந்த எண்ணெய் நிறுவனங்களில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது ஒன்றிய அரசு.
100 சதவீதம் அன்னிய முதலீடு
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களில் ஆட்டோமேட்டிங் ரூட்டில் 100 சதவீதம் அன்னிய முதலீடு செய்யும் உரிமையை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த அனுமதி மூலம் மத்திய அரசு பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை வெற்றிகரமான விற்பனை செய்து முடிக்க முடியும் என நம்புகிறது.
கச்சா எண்ணெய் நிறுவனம்
இதற்கு முன்பு கச்சா எண்ணெய் நிறுவனத்தில் குறிப்பாக அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் நிறுவனத்தில் அதிகப்படியாக 49 சதவீதம் பங்குகளை மட்டுமே ஒரு வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்ற முடியும். ஆனால் தற்போது 100 சதவீதம் பங்குகளையும் முதலீடு செய்து கைப்பற்ற முடியும்.
அரசு ஆணை
இந்த 100 சதவீத அன்னிய முதலீட்டு அனுமதியை அரசு ஆணையாகவே மத்திய அரசு வெளியிட்டுள்ள காரணத்தால், சட்டப்பூர்வமான மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன்
மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்து கைப்பற்ற அனில் அகர்வால்-ன் வேதாந்தா, அப்போலோ மேனேஜ்மெண்ட், திங்க் கேஸ் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் விருப்பம் தெரிவித்துள்ளது.
52.98% BPCL பங்குகள்
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தைத் தனியார்மயமாக்குதல் திட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை மொத்தமாகக் கைப்பற்றி, இந்தப் பங்குகளைக் கைப்பற்றும் நிறுவனம் நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வர முடியும்.