பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து தனது பட்டியலில் இருந்த அடுத்த நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. ஆம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை 210 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
ஏர் இந்தியாவிற்கு அடுத்து மத்திய அரசு விற்பனை செய்யும் 2வது நிறுவனம் இந்தச் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ். சரி எந்த நிறுவனம் வாங்கியுள்ளது தெரியுமா.?!
தனியாருக்கு விற்பனை
மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்காகப் பெரிய அளவில் லாபம் தராத மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் அரச சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. இதன் அடிப்படையில் தான் ஏர் இந்தியாவை மொத்தமாகத் தனியாருக்கு விற்பனை செய்தது.
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்
இதைத் தொடர்ந்து தற்போது சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சுமார் 210 கோடி ரூபாய் தொகைக்கு நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. இந்தச் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு வழக்கம் போல் ஏலத்தின் வாயிலாகவே விற்பனை செய்துள்ளது.
நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங்
இந்த ஏலத்தில் நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம் வெற்றிபெற்றதன் வாயிலாகச் சுமார் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறை (DSIR) கீழ் இருக்கும் பொதுத்துறை நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்-ன் 100 சதவீத பங்குகளையும் மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.
100 சதவீத பங்குகள் விற்பனை
இந்த 100 சதவீத பங்குகளை ஏலத்தின் மூலம் நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம் 210,00,6000 ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்ற JPM இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 190 கோடி ரூபாய் ஏல தொகையை முன்வைத்த நிலையில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
முக்கிய அமைச்சர்கள்
மேலும் நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனத்தின் ஏல விண்ணப்ப தேர்வை strategic disinvestment குழுவில் இருக்கும் சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஜிதேந்திர சிங் ஆகியோர் இணைந்து ஒப்புதல் அளித்துள்ளனர்.
நல்ல வாய்ப்பு
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதன் மூலம் நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம் நேரடியாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியிலோ அல்லது கூட்டணி முறையிலோ உற்பத்தியைத் துவங்கி பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.