ரிலையன்ஸ் ஜியோ மூலம் தனது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ள முகேஷ் அம்பானி தற்போது தனது ரீடைல் வர்த்தகத்தை வைத்து அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் டிஜிட்டல் சேவை பிரிவின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டிய முகேஷ் அம்பானி, தற்போது இதேபோன்ற பணியைத் தனது ரீடைல் சாம்ராஜ்ஜியத்திலும் நிகழ்த்த முடிவு செய்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 1.75 சதவீத பங்குகளைச் சில்வர் லேக் நிறுவனத்திற்குச் சுமார் 7,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான KKR ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்ந்தது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தடாலடி உயர்வு
9ஆம் தேதி வர்த்தகத் துவக்கத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 2,136 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் சில்வர் லேக் மற்றும் KKR முதலீடு குறித்த அறிவிப்புகள் வெளியானதின் எதிரொலியாக ஒரு பங்கு விலை 2,325 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 2 நாள் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 50,000 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது, மொத்த மதிப்பு 14.7 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி
இந்தத் தடாலடி பங்கு உயர்வால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2 நாட்களில் 7.8 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து இவரின் மொத்த சொத்து மதிப்பு 88.4 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
புதிய உச்சம்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக முகேஷ் அம்பானி இருந்தாலும் இதுவரையில் 88.5 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இதுவரை அடைந்தது இல்லை என்பதால் முகேஷ் அம்பானியின் வளர்ச்சியில் இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ரீடைல் பங்கு விற்பனை அறிவிப்பால் ஏற்பட்ட இந்தத் தடாலடி உயர்வு முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
5வது இடம்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களாகவே பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வாரன் பபெட் ஆகியோர் மத்தியில் பல முறை மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், எலான் மஸ்க்-ன் கடந்த வார வீழ்ச்சியில் முகேஷ் அம்பானி நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டாப் 5
முதல் இடத்தை 192.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் தலைவர் ஜெப் பிசோஸ் உள்ளார்.
2வது இடத்தில் 115.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ், 3வது இடத்தில் 113.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் LVMH நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட், 4வது இடத்தில் 100.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜூக்கர்பெர்க், 5வது இடத்தில் நம்ம முகேஷ் அம்பானி 88.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.