இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் முகேஷ் அம்பானி, தனது சொத்துக்கள் மற்றும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை மனைவி மற்றும் 3 பிள்ளைகள் மத்தியில் பிரித்துக் கொடுப்பது குறித்து நீண்ட காலமாகத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.
கடந்த வருடம் சொத்துப் பிரிப்பு மற்றும் நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளைக் குடும்பக் கவுன்சில் அமைத்து, அதன் மூலம் எடுக்கத் திட்டமிடப்பட்டதாகச் செய்திகள் வெளியானது, ஆனால் முகேஷ் அம்பானி சார்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி உலகளவில் பெரும் பணக்கார குடும்பங்கள் எப்படித் தங்களது சொத்துக்களைத் தனது வாரிசுகளுக்குப் பிரித்து கொடுத்துள்ளனர் என்பதை ஆய்வு செய்யத் துவங்கினார்.
பல வருடங்களாக வால்டன் முதல் கோச் வரையில் பல பணக்கார குடும்பத்தையும், அவர்கள் சொத்துப் பிரிப்பதில் கையாண்ட முறையையும் குறித்தும் முகேஷ் அம்பானி ஆய்வு செய்து தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி சமீபத்தில் சொத்துப் பிரிப்பு குறித்து மிகவும் தீவிரமாக உள்ளார், குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம் பெரும் முதலீட்டைத் திரட்டிய பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் தனது ஆதிக்கத்தை மட்டும் அல்லாமல் தனது குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் முகேஷ் அம்பானி.
208 பில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியம்
முகேஷ் அம்பானி கடந்த சில வருடமாகச் செய்த ஆய்வில் தனது 208 பில்லியன் டாலர் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தின் வால்டன் குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு சொத்தை பிரிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் மிகப்பெரிய சொத்துப் பிரிப்பு அல்லது பாகப்பிரிவினை நடந்தது வால்டன் குடும்பத்தில் தான்.
டிரஸ்ட் அமைப்பு
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி முகேஷ் அம்பானி தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்கள் வைத்துள்ள சொத்துக்கள் அனைத்தையும் டிரஸ்ட் அமைப்பின் கீழ் கொண்டு வரவும், அந்த டிரஸ்ட் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
4 பேர்
புதிதாக உருவாக்கப்படும் நிறுவனத்தில் நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் பங்கு இருப்பைக் கொண்டு உள்ளனர். இந்தக் கட்டமைப்பு மூலம் யாருக்கு எந்த நிறுவனம் எனக் குழப்பம் இருக்காது அதேபோல் பிரச்சனையும் இருக்காது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை இனி முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் அடுத்தத் தலைமுறை மொத்தமாக இணைந்து நிர்வாகம் செய்ய உள்ளதால், பல பிரச்சனைகளை தவிர்க்க முடிவது மட்டும் அல்லாமல் சிறப்பான முறையில் மேம்படுத்தவும் முடியும்.
ஆசியா
முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் ஆசியாவின் பல பணக்கார குடும்பங்கள் எப்படித் தங்களது சொத்துக்களைக் குடும்பத்தின் மத்தியில் பிரிப்பது என்பதில் அதிகளவிலான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதேபோல் ஆசியாவில் மட்டும் சுமார் 1000த்திற்கும் அதிகமான குடும்ப நிறுவனங்கள் உள்ளது.