ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தை வைத்து 1.65 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையை முதலீடாகப் பெற்றுள்ள நிலையில் தற்போது முகேஷ் அம்பானி தனது கவனத்தைத் தற்போது ரீடைல் வர்த்தகம் மீது திருப்பியுள்ளது.
இந்திய ரீடைல் வர்த்தகத்தில் ஏற்கனவே டாப் 5 இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு, அதீத கடனில் இருக்கும் சக போட்டி நிறுவனமான பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது ஏற்கனவே தமிழ் குட்ரிட்டனஸ் தளத்தில் வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் இந்த மாஸ்ட் பிளான் மூலம் brick-and-mortar அதாவது ஆஸ்தான கடைகள் வைத்து நடக்கும் ரீடைல் வர்த்தகத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடைல் உயர உள்ளது.
இணைப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சுர் குரூப் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் பியானியின் பியூச்சர் குரூப்-ன் பியூச்சர் ரீடைல், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ் மற்றும் பியூச்சர் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் ஆகிய 3 பெரிய நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், இணைத்த பின்பு இந்தக் கூட்டணி நிறுவனத்தை மொத்தமாக முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதாகத் தெரிகிறது.
ஜூலை 15
இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ரிலையன்ஸ் பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்றும் இத்திட்டத்தை ஜூலை 15ஆம் தேதி நடக்க இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர நிறுவனம் கூட்டத்திற்குள் முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பியூச்சர் குரூப்
இக்குழுமத்தின் ஒரு கிளை நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் திவாலானது. இதுமட்டும் இல்லாமல் இந்நிறுவனத்தின் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இக்குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி பல்வேறு வழிகளைத் தேடி வந்தார்.
குறிப்பாக ரீடைல் வர்த்தகப் பங்குகளை விற்பனை செய்வதும், பியூச்சர் ஜெனிராலி நிறுவனத்தில் இருந்து கூட்டணியை விற்பனை செய்யவும் முடிவு செய்திருந்தார்.
2,000 கடைகள்
பிக் பஜார், நீல்கிரிஸ், ஈசிடே போன்ற பிராண்டுகளில் கீழ் பியூச்சர் ரீடைல் இந்தியா முழுவதும் சுமார் 1,500 கடைகளை வைத்துள்ளது.
இதேபோல் சென்டரல், பிராண்ட் பேக்டரி போன்ற பிராண்டுகளின் கீழ் பியூச்சர் லைப்ஸ்டைல் நிறுவனத்தின் கீழ் சுமார் 500 கடைகள் இயங்கி வருகிறது.
ஜாக்பாட்
இந்தியா முழுவதும் 2000 கடைகள் என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் இருக்கும் மளிகை பொருட்கள், லைப்ஸ்டைல் பொருட்களின் வர்த்தகம் தாறுமாறாக இருக்கும் நிலையில் தற்போது பியூச்சர் குரூப்-இன் இந்த டீல் உறுதி அடைந்தால் மிகப்பெரிய ரிலையன்ஸ் வர்த்தக வாய்ப்பை அடையும்.