ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் ரீடைல் - அமேசான் மத்தியில் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ள நிலையில், பியூச்சர் குரூப் உரிமையாளர் கிஷோர் பியானிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. இதனால் மொத்தமும் கைவிட்டுப்போவது மட்டும் அல்லாமல் திவாலாகி விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே 200 பியூச்சர் குரூப் ரீடைல் கடைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 950 கடைகளைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளார். இது கைமாறினால் பியூச்சர் குரூப்-ன் மதிப்பு தரையைத் தட்டிவிடும்.
பியூச்சர் குரூப்
பியூச்சர் குரூப் நீண்ட காலமாக வர்த்தகம் இல்லாமல் நிதிநெருக்கடியில் சிக்கியிருந்த காரணத்தால், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குச் சுமார் 24,713 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசான் தொடுத்த வழக்கு சுமார் 18 மாதமாக நடந்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோமார்ட்
இந்த இடைப்பட்ட காலத்தில் பொருட்களை வாங்கி வர்த்தகம் செய்யும் அளவிற்குப் பியூச்சர் குரூப் நிறுவனத்திடம் பணம் இல்லாத காரணத்தால், இக்குழுமத்தின் 1700 கடைகளில் பெரும்பாலான கடைகளுக்குப் பொருட்களை ரிலையன்ஸ் ஜியோமார்ட் தான் விநியோகம் செய்து வந்தது. இதற்கு முக்கியக் காரணம் பியூச்சர் குரூப் தனது முந்தைய சப்ளையர்களுக்கான நிலுவைத் தொகையைத் செலுத்தவில்லை.
ஒப்பந்தம் ரத்து
இந்நிலையில் கடைகளுக்கான வாடகையைப் பியூச்சர் குரூப் செலுத்தாத காரணத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தகம் செய்யக் கொடுக்கப்பட்ட கடைகளின் ஒப்பந்தத்தை ரத்துச் செய்து தற்போது மீண்டும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்திற்குக் கொடுக்கப்படுகிறது.
குத்தகை ஒப்பந்தம்
இதனால் பியூச்சர் குரூப் உடனடியாக 950 கடைகளுக்கும் வாடகை பணத்தைச் செலுத்த வேண்டும் இல்லையெனில் குத்தகை ஒப்பந்தம் முறியும். இதன் மூலம் கடந்த முறைபோலவே ரிலையன்ஸ் ரீடைல் இந்த 950 கடைகளையும் எளிதாகக் கைப்பற்றி, பியூச்சர் குரூப் ஊழியர்களைத் தனது ஊழியர்களாக மாற்ற முடியும்.
950 கடைகள்
இந்த 950 கடைகளில் 835 பியூச்சர் ரீடைல் ஸ்டோர்ஸ், 112 பியூச்சர் லைப்ஸ்டைல் ஸ்டோர்ஸ் ஆகியவை அடக்கம். இதில் பிக் பஜார், பேஷன் அட் பிக் பஜார், ஈசிடே, ஹெரிடேஜ் ஸ்டோர்ஸ், சென்டரல் ஸ்டோர்ஸ், பிராண்ட் பேக்டரி போன்ற பல முக்கியப் பிராண்ட் கடைகள் அடக்கம்.
65 சதவீத வருமானம்
இந்த 950 கடைகளில் இருந்து தான் பியூச்சர் குரூப் தனது 55-65 சதவீத வருமானத்தைப் பெற்று வருகிறது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் ரீடைல் - அமேசான் பேச்சுவார்த்தையில் கட்டாயம் ரிலையன்ஸ்-க்கு இந்த வர்த்தகத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
திவால்
இல்லையெனில் பியூச்சர் குரூப்-யிடம் கடைகள் எண்ணிக்கை 1700ல் இருந்து வெறும் 500 முதல் 600 கடைகள் மட்டுமே இருக்கும் இதனால் அமேசானுக்கும் பயனில்லை. இது மட்டும் அல்லாமல் இருவரும் வாங்காத பட்சத்தில் பியூச்சர் குரூப் திவாலாகி விடும்.
ரிலையன்ஸ் ரீடைல் வாக்குறுதி
ஆனால் ரிலையன்ஸ் ரீடைல் பியூச்சர் குரூப் வர்த்தகம் தனது கட்டுப்பாட்டிற்கு வரும் நிலையில் நிர்ணயம் செய்யப்பட்ட 24,713 கோடி ரூபாய் தொகையை அளிப்பதாக உறுதியளித்து உள்ளது. இதன் மூலம் பியூச்சர் குரூப் உரிமையாளர் கிஷோர் பியானிக்கு வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.