ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், நிர்வாக மேம்பாட்டுக்காகவும் அடுத்தடுத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் இந்த வேளையில் இந்தியப் பங்குச்சந்தையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இந்திய வர்த்தகச் சந்தையில் ஏற்கனவே பல்வேறு துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவை வைத்து இன்னும் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கத் திட்டம் தீட்டி வருகிறார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானியின் மாபெரும் திட்டத்தின் முதல் படி தான் இந்தச் சாதனை.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை விற்று வெறும் 2 மாத காலத்தில் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டிய ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம், தற்போது ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
சில்வர் லேக்
ஆம் ரிலையன்ஸ் ஜியோ பிரிவு பங்கு விற்பனையைப் போல் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவு பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்து, முதல் விற்பனையாக 1.75 சதவீத ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளைச் சில்வர் லேக் நிறுவனத்திற்குச் சுமார் 7,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்
KKR முதலீட்டுப் பேச்சுவார்த்தை
இதையடுத்து தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான KKR ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 1 முதல் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு ஆர்வமாக இருப்பதாகவும், இந்த முதலீட்டு குறித்து இருதரப்பு நிறுவனங்கள் மத்தியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமேசான் வதந்தி
இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடைல்-ன் 40 சதவீத பங்குகளைச் சுமார் 20 பில்லியன் டாலர் தொகைக்கு அமேசான் வாங்க போவதாகச் செய்திகள் வெளியானது, ஆனால் அதை ரிலையன்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது.
200 பில்லியன் டாலர்
பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பாக நெட்மெட்ஸ், அர்பன் லேடர், Milkbasket, பெண்கள் உள்ளாடை நிறுவனமான zivame போன்ற நிறுவனங்களைத் தனது ரீடைல் வர்த்தகக் குடையில் கீழ் இணைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளின் மூலம் இந்நிறுவனப் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீடு 200 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
15.29 லட்சம் கோடி ரூபாய்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளில் நேற்றை வர்த்தகத்திற்கும் இன்றைய வர்த்தகத்திற்கும் பெரிய அளவிலான மாற்றம் இல்லை என்றாலும் பங்கு மதிப்பு சரியவில்லை.
இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 2,315 ரூபாய் வரையில் உயர்ந்து மொத்த சந்தை மதிப்பீடு 15.29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, டாலர் மதிப்பீட்டில் சுமார் 208 பில்லியன் டாலர் என்ற அளவீட்டை எட்டியுள்ளது.
முதல் நிறுவனம்
இந்திய பங்குச்சந்தையில் முதல் முறையாக ஒரு நிறுவனம் 200 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்றால் அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான். அதுவும் இது தான் முறை.
ரிலையன்ஸ் ஜியோ போல ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளும் விற்பனை செய்யப்பட்டால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2600 ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக மதிப்பு
பியூச்சர் குரூப் வர்த்தகத்திற்கு முன் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவின் மொத்த மதிப்பு 1.5 முதல் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், தற்போது பியூச்சர் குரூப் கைப்பற்றிய பின்பு சில்வர் லேக் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட 7300 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.