ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவான ஜியோ நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம் வெறும் 3 மாதத்தில் சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
இதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவு பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழு.
ஜியோமார்ட் மற்றும் வாட்ஸ்அப் இணைப்பு மூலம் ரீடைல் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்நிறுவனத்தின் மூலமாகவும் முதலீட்டை ஈர்க்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திர கூட்டத்தில், ஜியோ நிறுவனத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீடுகளைக் கண்டு பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே அடுத்த சில மாதங்களில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனப் பங்கு விற்பனை மூலம் புதிய முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் குழுமத்திற்குள் இணைவார்கள் எனத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
3 லட்ச முதலீட்டாளர்கள்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய 41 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 லட்ச முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும். அடுத்த சில காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் அதிகப்படியான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இணைய உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் - சவுதி அரம்கோ டீல்
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனமாக விளங்கும் அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை 15 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றி உற்பத்தி மற்றும் விநியோகத்தை உலகளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டது.
ஆனால் இன்று வரையில் இத்திட்டம் அடுத்தகட்டத்திற்குச் செல்லவில்லை என்பது தான் சோகமான விஷயம்.
சமாளிக்கும் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான டீலாக இருக்கும் ஆராம்கோ ஒப்பந்தம் உறுதியாகாமல் இருக்கும் நிலையில், இதைச் சமாளிக்கவே டெலிகாம் பிரிவை தொடர்ந்து தற்போது ரீடைல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து வருவதாக பொதுச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
ரீடைல் சாம்ராஜ்ஜியம்
இந்தியா முழுவதும் சுமார் 11,800 கடைகள் மூலம் உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், பேஷன், லைப்ஸைட்ல், நகைகள் எனப் பல வகையிலான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 2020 நிதியாண்டில் மட்டும்640 மில்லியன் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ரீடைல் கடைகளில் பொருட்களை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் 40 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் சாம்ராஜ்ஜியத்தில் மொத்த 1.4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்
1,65,000 கோடி ரூபாய் வருவாய்
கடந்த 3 வருடத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் கிட்டதட்ட 2 மடங்கிற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் 2020ஆம் நிதியாண்டில் 1,65,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதேபோல் லாப அளவீட்டில் 2020ஆம் நிதியாண்டில் 9,500 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
பியூச்சுர் குரூப்
இதற்கிடையில் ரிலையன்ஸ் ரீடைல் இந்தியாவில் மற்றொரு முன்னணி நிறுவனமாக விளங்கும் பியூச்சுர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது வெற்றி அடைந்தால் இந்நிறுவனத்தில் இருக்கும் 1,500 கடைகளும் ரிலையன்ஸ் ரீடைல் கீழ் வரும்.
இதனால் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கடைகளின் எண்ணிக்கை 13,300 ஆக உயரும்.
ஜியோமார்ட்
இந்நிலையில் இந்த வருடப் பண்டிகை காலத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ஆஸ்தான ஈகாமர்ஸ் தளமான ஜியோமார்ட் தளத்தில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களைத் தாண்டி ஆடை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவை பிரிவுகளை விற்பனைக்காக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஜியோமார்ட் நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உடன் நேரடியாகப் போட்டிப்போட உள்ளது.