இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சில மாதங்களுக்கு முன்பு தனது எண்ணெய் வர்த்தகம் மற்றும் அதைச் சார்ந்த சொத்துக்கள் அனைத்தையும் ரிலையன்ஸ் O2C நிறுவனத்திற்குள் கொண்டு வந்து பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்தது.
இதன் மூலம் தற்போது ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், ரிலையன்ஸ் O2C என 3 பிரிவுகள் தனித்தனியாகத் தொடர்பு இல்லாமல் இயங்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் O2C நிறுவனம்
இந்த நிர்வாக மாற்றத்திற்குப் பின்பு கொரோனா தொற்றின் 2வது அலை ஏற்பட்ட நிலையிலும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ளாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலிருந்து வருகிறது. குறிப்பாக முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் O2C நிறுவனத்தின் மீது அதிகளவிலான நம்பிக்கை உள்ளது.
கொரோனாவுக்குப் பின்
தற்போது நாட்டின் உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று, லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவில் குறையும் நேரத்தில் ரிலையன்ஸ் பாலிமர் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விற்பனை பெரிய அளவில் உயரும் எனக் கணிப்புகள் நிலவுகிறது.
டார்கெட் விலை 2,580 ரூபாய்
இதற்கிடையில் கடந்த வாரம் Jefferies நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர்கள் ரிலையன்ஸ் பங்குகளை 'Buy' என அறிவித்து டார்கெட் விலையாக 2,580 ரூபாயை அறிவித்தனர். இதன் வாயிலாகக் கடந்த ஒரு வாரத்தில் ஜிடிபி, கொரோனா, வேலைவாய்ப்பு தரவுகளின் தடையைத் தாண்டி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
15 சதவீத வளர்ச்சி
இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதாவது மே 27ஆம் தேதி 1,976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2,212 ரூபாய் வரையில் உயர்ந்து சுமார் 15 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வங்கி வைப்பு நிதி
கிட்டதட்ட வங்கி வைப்பு நிதி மூலம் கிடைக்கும் 2 வருட லாபத்தை வெறும் 7 நாட்களில் அளித்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள். மேலும் கூடிய விரைவில் ரிலையன்ஸ் பங்குகள் தனது 52 வார உயர்வான 2,369 ரூபாய் அளவீட்டைத் தாண்டும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
சவுதி ஆராம்கோ
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனமான சவுதி ஆராம்கோ நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், நேரடியாக ரீடைல் சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்யவும் ரிலையன்ஸ் O2C நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள நிலையில் இதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரிலையன்ஸ் ரீடைல்
இதேபோல் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் உடனான ஒப்பந்தம் அமேசான் தலையீடு காரணமாக நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், விரைவில் இதற்கான தீர்வை எட்ட ரிலையன்ஸ் குழுமம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இது வெற்றி அடையும் பட்சத்தில் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகம் பல மடங்கு உயரும்.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவில் பிற உலக நாடுகளைப் போலவே 5ஜி சேவை அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து, டெலிகாம் நிறுவனங்கள் சோதனை நடத்தி வருகிறது. 4ஜி சேவை மூலம் இந்தியாவில் டெலிகாம் புரட்சியை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ அடுத்த புரட்சியை 5ஜி சேவை மூலம் விரைவில் காட்ட உள்ளது.
பங்கு முதலீட்டாளர்களுக்கு லாபம்
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 3 முக்கியப் பிரிவுகளிலும் 3 முக்கியத் திட்டங்கள் கையில் இருக்கும் காரணத்தால் எந்தத் திட்டம் வெற்றிபெற்றாலும் ரிலையன்ஸ் பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும். இது முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை அளிக்கும்.