இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், இக்குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி சத்தமே இல்லாமல் சில முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் எவ்வளவு தான் வெளிநாட்டு முதலீடுகள் வந்தாலும், தொடர்ந்து இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முகேஷ் அம்பானியின் குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகளுக்கு வர்த்தகத்தைப் பிரித்துக் கொடுக்கும் பணிகளைத் துவக்கியுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமம்
ரிலையன்ஸ் குழுமம் கடந்த சில வருடங்களாகத் தனது நிர்வாகத்திலும், நிறுவன கட்டமைப்பிலும் சில முக்கிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டு வருகிறது. ஆம் டாடா குழுமத்தில் எப்படி டாடா சன்ஸ் நிறுவனம் அனைத்து கிளை நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனமாக இருக்கிறதோ, இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை மாற்றத் திட்டமிட்டு வருகிறார்.
3 நிறுவனமாகப் பிரித்தல்
இதன், முதல் படி தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் தனித்தனியாக 3 நிறுவனத்தின் கீழ் பிரிந்தது. தற்போது எனர்ஜி, டெலிகாம், ரீடைல் எனப் பிரிவுகளின் வர்த்தகம் ரிலையன்ஸ் O2C, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் கீழ் இருக்கிறது.
ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் ஆம்பானி
இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகள் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் ஆம்பானி ஆகியோருக்கு எந்த வர்த்தகத்தைக் கொடுப்பது, யாருக்கு எந்த நிறுவனத்தை அளிப்பது போன்ற முடிவுகளை எடுக்கத் துவங்கியுள்ளார். முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி இதுநாள் வரையில் நேரடி நிர்வாக முடிவுகளில் இல்லாத நிலையில் தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.
கிளீன் எனர்ஜி வர்த்தகப்பிரிவு
ரிலையன்ஸ் கிளீன் எனர்ஜி வர்த்தகப் பிரிவில் துவங்கப்பட்டு உள்ள இரு புதிய நிறுவனங்களான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார், ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி ஆகிய நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த அம்பானியை நிர்வாகத் தலைவராக (Director) நியமிக்கப்பட்டு உள்ளார்.
வர்த்தகப் பிரிப்பு
அனந்த் அம்பானி நியமனத்தின் மூலம் 3 பிள்ளைகளுக்கு எந்த நிறுவனம், எந்த வர்த்தகம் எனக் கிட்டதட்ட முடிவாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் ஆம்பானி இருக்கும் பதவிகளை வைத்துப் பார்க்கும் போது சில புரிதல் வருகிறது.
முத்த மகன் ஆகாஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் முத்த மகனான ஆகாஷ் அம்பானி தற்போது 3 நிறுவனங்களின் தலைவராக உள்ளார்.
சாவன் மீடியா
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் & ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ்
மகள் ஈஷா அம்பானி
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தற்போது 3 நிறுவனங்களின் தலைவராக உள்ளார்.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் & ஜியோ லிமிடெட்
ரிலையன்ஸ் பவுண்டேஷன்
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் & ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ்
ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகம் இணைந்திருக்கும் காரணத்தால் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகிய இருவருமே தலைவராக உள்ளனர்.
இளைய மகன் அனந்த் அம்பானி
26 வயதான அனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கியமான மற்றும் அடித்தளமான எண்ணெய் மற்றும் எனர்ஜி வர்த்தகத்திற்குத் தலைவராக உள்ளார்.
ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் & ரிலையன்ஸ் நியூ சோலார்
ரிலாயன்ஸ் O2C
ஜியோ பிளாட்பார்ம்ஸ்
ஆகிய நிறுவனத்தில் தலைவராக உள்ளார். இதை வைத்துப் பார்க்கும் போது எண்ணெய் மற்றும் எனர்ஜி வர்த்தகம் அனைத்தும் அனந்த் அம்பானி கட்டுப்பாட்டில் வருவதாகத் தெரிகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த மாற்றத்தின் மூலம் ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனர்ஜி, ரீடைல், டெலிகாம் ஆகிய 3 நிறுவனத்திலும் அதிகளவிலான பங்குகளை வைத்து அனைத்து நிர்வாகக் குழுவிலும் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் தாய் நிறுவனமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் முகேஷ் அம்பானி தலைமை வகிப்பார் எனக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் O2C, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்களைத் தனித்தனியாகப் பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.