டெல்லி : இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மக்கள், குறிப்பாக சினிமா துறைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் பெரு நகரங்களில் வார விடுமுறையை கழிக்க பெரிய பெரிய மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் குவிவதை காண முடிகிறது.
இந்நிலையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர் வணிகத்தில் ஈடுபட்டு வரும், பிவிஆர் மல்டிபிளக்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையினை பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் இறுதி முதல் கொரோனாவால் நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்ட நிலையில், தியேட்டர் வணிகம் கிட்டதட்ட ஆறு மாதம் முற்றிலும் முடங்கியது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 184 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதன் நிகரலாபம் 48 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக இதன் வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடு மூலம் கிடைக்கும் வருவாய் 40.4 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 973 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
கிட்டதட்ட ஆறு மாதங்களாக இந்த நிறுவனத்தின் வணிகம் முடங்கிய நிலையில், வருவாய் ஏதும் இல்லை. மேற்கொண்டும் கொரோனா தியேட்டர் வணிகத்தினை பாதித்து வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் பல வழிகாட்டுதல் கீழ் அக்டோபர் 13 முதல் மீண்டும் சினிமாக்களை இயக்க அரசாங்கம் அனுமதித்தது. இதனடிப்படையில் சில மாநிலங்களில் தியேட்டர்களை இயக்க அனுமதி கிடைத்திருந்தாலும், இன்னும் பல மாநிலங்களில் அனுமதிக்கப்படவில்லை.
எனினும் தற்போது பிவிஆரின் பெரும்பாலான தியேட்டர்களை திறக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். குறிப்பாக மஹாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் திறப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் மக்களின் பாதுகாப்பு கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இது அடுத்து வரும் காலாண்டுகளில் இதன் லாபத்தினை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த நிலையில் பிவிஆரின் பங்குகள் 2.55 ரூபாய் அதிகரித்து, 1,108 ரூபாயாக அதிகரித்து காணப்படுகிறது.