கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி ரூபாய் 1.57 கோடி மோசடி செய்த மர்ம மனிதனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வரும் பழக்கம் அதிகமாகி வருகிறது. கிரிப்டோகரன்சியின் நம்பகத்தன்மை குறித்து பொருளாதார வல்லுநர்கள் பல விழிப்புணர்வு உரைகளையும் பேட்டிகளையும் கொடுத்த போதிலும், இன்னும் பலர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து தான் வருகின்றனர்.
இந்த நிலையில் போலி இணையதளம் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வைத்து ரூபாய் 1.57 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முதலீடு
மும்பையில் உள்ள மலபார் என்ற பகுதியைச் சேர்ந்த 36 வயது நபருக்கு ஆன்லைன் மூலம் வர்த்தகர் ஒருவர் பழக்கமானார். அதன்படி ஒரு குறிப்பிட்ட இணையதளம் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் அடையலாம் என்று அவருக்கு ஆசை காட்டியதாக தெரிகிறது.
நல்ல லாபம்
இதனை அடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆன்லைனில் அவர் கூறிய இணையதளத்தின் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார். முதலில் முதலீடு செய்த சில நாட்களில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
ஆசை
இதனை அடுத்து அவர் ஆசையால் தூண்டப்பட்டு மேலும் மேலும் முதலீடு செய்த நிலையில் ஒரே மாதத்தில் ரூ.1.57 கோடி முதலீடு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சில நாட்களில் தன்னுடைய முதலீடு நல்ல லாபத்தை கிடைத்துள்ளதை அறிந்த முதலீடு செய்த நபர், தான் பணத்தை திரும்ப பெற முயற்சித்த போது, முதலீட்டாளருக்கு மேலும் அறிவுரை கூறி ஆசை காட்டிய நபர் இன்னும் அதிக லாபம் கிடைக்கும் எனவும் பொறுத்திருங்கள் எனவும் கூறி முதலீட்டை லாபத்துடன் எடுக்கவிடாமல் செய்ததாக தெரிகிறது.
சந்தேகம்
இதனால் சந்தேகம் ஏற்பட்ட அவர் பணத்தை உடனடியாக எடுக்க வேண்டும் என வற்புறுத்தியதை அடுத்து திடீரென அந்த மர்ம நபரின் மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இமெயில் உள்பட எந்த வித முறையிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனை அடுத்து சைபர் கிரைமில் அவர் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
போலி இணையதளம்
போலியான இணையதளம் மூலம் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து பெரும் அறிவுரையின் பெயரில் முதலீடு செய்ய வேண்டாம் என ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருந்தும் இதுபோன்ற சில நபர்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கின்றனர் என்றும், ஆன்லைன் மூலம் பொருளாதார குற்றம் செய்யும் நபர்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம் என்பதால், முதலீடு செய்பவர்கள் தான் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications