தமிழகத்தில் உள்ள முன்னணி வணிக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று தான் முருகப்பா குழுமம். 1900ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குழுமத்தில் தான் நீண்ட நாட்களாக ஒரு பதவி பிரச்சனை இருந்து வருகிறது.
முருகப்பா குழுமத்தை சேர்ந்த எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம், தங்களுக்கு 8.15% பங்குகள் உள்ள அம்பானி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் தனக்கு பதவி மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து போராடி வருகிறார்.
ஒரு கட்டத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கையினையும் எடுக்கபோவதாக கூறியவர், அதற்கான நடைமுறைகளைகளிலும் இறங்கினார்.
முருகப்பா குழும வணிகம்
சென்னையை அடிப்படையாகக் கொண்ட இந்த குழுமம், கடந்த 1900ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த குழுமத்தின் மதிப்பு சுமார் 38,105 கோடி ரூபாயாகும். இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ஐந்து தலைமுறைகளாக குடும்ப வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.
பதவி பிரச்சனை
இந்த நிலையில் முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம். முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில், வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாக கடந்த பல மாதங்களாகவே பல கட்ட பேச்சு வார்த்தகளை நடத்தி வருகிறார்.
அனைவருக்கும் லீகல் நோட்டீஸ்
முருகப்பா குழுமம் போன்ற தலைமுறை தலைமுறையாக வியாபாரம் செய்து வரும் ஒரு நிறுவனத்தில், பெண்களின் பங்கு இன்றைய நாளிலும் பெரியதாக இல்லை. ஏனெனில் சட்ட வாரிசுகள் வெளிப்படையாக ஆண்களே உள்ளனர் என்றெல்லாம் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், அம்பாடி இண்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவன உறுப்பினர்களுக்கும் லீகல் நோட்டீஸ் அனுப்பினார்.
வள்ளி அருணாச்சலத்திற்கு எதிராக வாக்கு
எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த வாக்கெடுப்பில் வள்ளி அருணாச்சலத்திற்கு எதிராக 91.36% வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கெல்லாம் அசந்து போகாதவராய் நீதித்துறை மீது எங்களுக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது, நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நீதி மேலோங்கும் என்று நம்புகிறோம் என்றும் கூறியிருந்தார்.
முருகப்பா குழுமம் மகள்களை ஓரங்கட்டுகிறது
இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு வெளியான செய்தியொன்றில், முருகப்பா குழுமம் தொடர்ந்து மகள்களை ஓரங்கட்டுகிறது. தலைமை பதவிகளுக்கு மகன்களை மட்டுமே வழிகாட்டுகிறது என்றும் வள்ளி அருணாச்சலம் கூறியுள்ளார். நாங்கள் தொழில்முறையில் தகுதியுள்ள நபர்களாக இருக்கிறோம். ஆனால் நாங்கள் வணிகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறோம். எங்களது ஆர்வம் புறக்கணிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார். .
வெற்றி பாதையாக மாறுமா?
இந்தியாவில் இது போன்ற பரம்பரை வணிகங்களில், இன்னும் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆக பாலின விஷயங்களை கருத்தில் கொள்ளாமல், திறனை உள்ளடக்கிய ஒரு மன நிலையை ஏற்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
உண்மையில் பாகுபாடின்றி திறமைக்கு ஏற்ப வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி வழங்கப்படுமா? அவரது நீண்ட நாள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்குமா என்று பொறுத்திருந்தான் பார்ப்போமே.