முருகப்பா குழுமம். பாரிஸ் சர்க்கரை, டிஐ சைக்கிள்ஸ், சோழமண்டலம் ஃபைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், சோழமண்டலம் இன்சூரன்ஸ், கோரமண்டல் இன்ஜினியரிங், சாந்தி கியர்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷனல் உரக் கம்பெனி... என சுமாராக 28 வியாபாரங்களைச் செய்து வரும் ஒரு தமிழ் நாட்டு வணிக சாம்ராஜ்ஜியம்.
முருகப்பா குழுமத்தின் 10 கம்பெனிகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன.
முருகப்பா குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னை பாரிஸ் கார்னரில் தான் இருக்கிறது. 1900-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாரம்பரிய குழுமம் சுமாராக 38,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக வளர்ந்து இருக்கிறது.
Ambadi Investments Ltd (AIL)
என்ன தான் முருகப்பா குழுமத்துக்குச் சொந்தமாக பல கம்பெனிகள், பல்வேறு வியாபாரங்களைச் செய்தாலும், இந்த Ambadi Investments Ltd (AIL) என்கிற கம்பெனி தான், ஹோல்டிங் கம்பெனியாக (Holding Company) இருந்து செயல்படுகிறது. எனவே, அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழு முருகப்பா குழுமத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வள்ளி அருணாசலம்
2017-ம் ஆண்டு வரை முருகப்பா குழுமத்தை, எம் வி முருகப்பான் அவர்கள் தலைவராக இருந்து நிர்வகித்து வந்தார். எம் வி முருகப்பன் 2017-ம் ஆண்டு மறைந்த பின், அவருடைய மூத்த மகளான வள்ளி அருணாச்சலம், அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழுவில், இயக்குநராக தன்னை நியமிக்குமாறு கேட்டார். சீட் மறுக்கப்பட்டது. பிரச்சனை மெல்ல பெரிதாகத் தொடங்கிய்து.
சட்ட ரீதியிலான நடவடிக்கைகள்
கடந்த ஜனவரி 2020 கால கட்டத்தில் "என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு சரியான தீர்வு வழங்கப்படவில்லை என்றால், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும்" எனச் சொன்னார். அதோடு தான் ஒரு பெண் என்கிற ஒரே காரணத்தால், இயக்குநர் குழுவில் இடம் கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆண் Vs பெண்
பிசினஸ் டுடே பத்திரிகையில், 28 ஜனவரி 2020 அன்று வெளியான கட்டுரையில், ஆண் பெண் குடும்ப உறுப்பினர்களுக்கு காட்டப்படும் பாரபட்சம் பற்றித் தெளிவாக பேசி இருந்தார் வள்ளி அருணாச்சலம். அதிலும் குறிப்பாக "23 வயது மட்டுமே நிறைவடைந்த, குடும்ப வியாபாரத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத, ஒரு கல்லூரி மாணவன் (ஆண்) அம்பதி இன்வெஸ்மெண்ட் கம்பெனியின் இயக்குநர் குழுவில் நியமிக்கப்படுக்கிறார். எனக்கு 23 ஆண்டு கால பணி அனுபவமே இருக்கிறது" எனச் சொல்லி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
என்ன அனுபவம்
சரி பிரச்சனைகளை விடுங்கள். வள்ளி அருணாச்சலம் அவர்களுக்கு என்ன பணி அனுபவம் இருக்கிறது? வள்ளி அருணாச்சலம் அமெரிக்காவில் செட்டிலான ஒரு அணுசக்தி பொறியாளர் (Nuclear Engineer). அதே துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்கிறது அவுட் லுக் இந்தியா பத்திரிகை. உலகின் டாப் 500 கம்பெனிகளாக சொல்லப்படும் Fortune 500 கம்பெனிகள், சிலவற்றில் 23 ஆண்டு காலம் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது என அவரே அவுட் லுக் இந்தியா பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார்.
பங்குகள் கையிருப்பு
பணி அனுபவம் எல்லாம் போக, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரான எம் வி முருகப்பனின் மனைவி வள்ளி முருகப்பன், மூத்த மகள் வள்ளி அருணாச்சலம், இளைய மகள் வெள்ளச்சி முருகப்பன் என, இந்த மூவரும் சேர்ந்து, முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் கம்பெனியான, அம்பதி இன்வெஸ்மெண்டில் 8.15 பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
ஆண்டுப் பொதுக் கூட்டம்
இத்தனை பஞ்சாயத்துக்களுக்குப் பின், 21 செப்டம்பர் 2020 அன்று, முருகப்பா குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடக்க இருக்கிறது. அந்தக் கூட்டத்தில், வள்ளி அருணாச்சலம் அவர்களை, அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இயக்குநராக நியமிப்பது தொடர்பாக விவாதிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முதல் பெண் இயக்குநர்
நாம் ஏற்கனவே சொன்னது போல, தமிழகத்தின் 119 ஆண்டு பாரம்பரியம் கொண்டது முருகப்பா குழுமம். ஒருவேளை வள்ளி அருணாச்சலம் அவர்கள், அம்பதி இன்வெஸ்மெண்ட் கம்பெனியின் இயக்குநர் குழுவில், ஒரு இயக்குநராக நியமிக்கப்பட்டால், முருகப்பா குழுமத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், கம்பெனியின் இயக்குநர் குழுவில் இடம் பிடிக்கும் முதல் பெண் இயக்குநர் என்கிற பெருமையைப் பெறுவார் வள்ளி அருணாச்சலம்.
வள்ளி அருணாச்சலம்
இந்த விவகாரம் குறித்து பிசினஸ் ஸ்டாண்டர்டிடம் பேசிய வள்ளி அருணாச்சலம் "இயக்குநர் குழு கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. 21 செப்டம்பர் 2020 அன்று நடக்க இருக்கும் பொதுக் கூட்டம் தொடர்பாக, பங்குதாரர் என்கிற முறையில் எங்களுக்கு நோட்டிஸ் வந்திருக்கிறது. அதில் தான் என்னை இயக்குநர் குழுவில் ஒரு இயக்குநராக நியமிப்பது தொடர்பாக, பேச இருப்பதும் தெரிய வந்தது. என்னை ஒரு இயக்குநராக நியமிப்பார்கள் என நம்புகிறேன்" எனச் சொல்லி இருக்கிறார்.