டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருக்கும் என்.சந்திரசேகரன் அவர்களுக்கு மீண்டும் பணிக்காலம் நீட்டிப்பு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸ்-ல் இன்று முக்கியமான உயர்மட்ட நிர்வாகக் குழு நடந்தது.
இக்கூட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பின் டாடா குழுமத்தின் சேர்மன் எமரிட்டஸ் ஆன ரத்தன் டாடாவும் கலந்து கொண்ட காரணத்தால் இக்கூட்டம் மிகவும் முக்கியமானதாக மாறியது.
இக்கூட்டத்தின் முடிவில் என்.சந்திரசேகரன் அவர்களின் பணியைப் பாராட்டி மீண்டும் டாடா சன்ஸ் சேர்மன் பதவியில் மீண்டும் அமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் என்.சந்திரசேகரன்
என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் மிகவும் சிறப்பாக இயங்கிய நிலையில் அடுத்த 5 வருடம் இப்பதவியில் பணியாற்ற டாடா குழுமத்தின் உயர் மட்ட நிர்வாகக் குழு, டாடா டிரஸ்ட் நிர்வாகக் குழு, டாடா டிரஸ்ட் தலைவர் ரத்தன் டாடா உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
5 வருடம் சாதனை
இன்று நடந்த கூட்டத்தில் டாடா சன்ஸ் நிர்வாகக் குழு என்.சந்திரசேகரன் கடந்த 5 வருடம் செய்த பணிகளையும், அதன் மூலம் நிறுவனத்தில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி, வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்து மீண்டும் அவருக்கு 5 ஆண்டு இப்பதவியில் பணி காலம் நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ரத்தன் டாடா
மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரரான டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா கூறுகையில் திரு. என் சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்திறன் குறித்து ரத்தன் டாடா திருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துப் பணிகாலம் நீட்டிக்கப் பரிந்துரை செய்தார்.
என்.சந்திரசேகரன் செம ஹேப்பி
இதன் மூலம் என்.சந்திரசேகரன் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் அனைவரின் ஒப்புதலுடன் மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அடுத்த 5 வருடம் பணியாற்ற உள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமத்தை வழிநடத்துவது ஒரு பாக்கியம், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டாடா குழுமத்தை அடுத்தக் கட்டத்தில் வழிநடத்தும் வாய்ப்பை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications