கொரோனா வைரஸ். உலகம் முழுக்க சுமார் 4.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 21,500 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
இந்த கொடிய வைரஸை எதிர் கொள்ள, சமூக விலகலை (Social Distancing)-தான் நம்பி இருக்கிறது இந்தியா.
எனவே நேற்று முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுக்க ஷட் டவுன் செய்து இருக்கிறது மத்திய அரசு.
உதவித் திட்டங்கள்
இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு பல சிறப்புத் திட்டங்களை அறிவித்து இருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு பல இடங்களில் நிதி அமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து இருப்பதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. அப்படி பெண்களுக்கு என்ன திட்டங்களைச் சொல்லி இருக்கிறார்கள் வாருங்கள் பார்ப்போம்.
உணவு
வீட்டில் நம் தாய்மார்கள், தாங்கள் உணவருந்தவில்லை என்றால் கூட, தன் பிள்ளைகள் தொடங்கி தன்னைச் சுற்றி உள்ள எல்லாருக்கும் உணவு கொடுப்பவள். எனவே இந்தியாவின் அடித்தட்டு மக்களான 80 கோடி பேருக்கு கூடுதலாக ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க இருக்கிறது மத்திய அரசு. அதோடு அடுத்த 3 மாதங்களுக்கு, ஒரு கிலோ பருப்பும் (ஏதேனும் ஒரு பருப்பு வகை) வழங்க இருக்கிறார்களாம். வீட்டின் அன்னலட்சுமி மனதை உணவில் இருந்தே குளிர வைக்கத் தொடங்கினார் நிதி அமைச்சர்.
500 ரூபாய்
பிரதான் மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு, மத்திய அரசு நேரடியாக பணத்தை வழங்க இருக்கிறார்களாம். இந்த 500 ரூபாய் ஒரே தவணையில் வழங்குவார்களாம்.
பெண்கள் சுய உதவிக் குழுக்கள்
இந்தியாவில் இருக்கும் 63 லட்சம் பெண்கள் சுய உதவிக் குழுக்கள், இதுவரை சொத்து பத்துக்கள் என எதையும் வங்கியில் பிணையாக வைக்காமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். இப்போது இந்த 10 லட்சம் வரம்பை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள்.
கேஸ் சிலிண்டர்
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் பெண்களுக்கு, அடுத்த 3 மாதங்களுக்கு, இலவசமாக கேஸ் சிலிண்டர்கள் வழங்க இருக்கிறார்களாம். இதனால் இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் சுமார் 8.3 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.
விதவைப் பெண்கள்
தன் கணவர்களை இழந்து தவிக்கும் விதவைப் பெண்கள் தங்களின் வாழ்கையை இந்த இக்கட்டான சூழலில் நடத்த, மத்திய அரசு 1,000 ரூபாய் பணத்தை அடுத்த 3 மாதங்களில், இரண்டு தவணைகளாக வழங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


Click it and Unblock the Notifications