தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. ஆனால் மக்களின் மனம் மட்டும் மாறவில்லை. வாங்கும் அளவை வேண்டுமானாலும் குறைத்துக் கொள்வோமே தவிர, வாங்குவதை தவிர்க்க மாட்டோம் என்பது போலத் தான், இந்த கொரோனா காலகட்டத்திலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
ஆனால் இப்படி ஒரு நிலையில் தான் தங்கம் வாங்க இனி ஆதார் பான் கட்டாயம் என்ற செய்தி பரவலாக பரவி வருகிறது.
இதற்கு விளக்கமளித்துல்ல அரசு, 2 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய நகை, ரத்தினங்கள், தங்கம் வெள்ளிக்கு கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்க நகை வாங்கினால் ஆதார், பான் எண் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எதற்காக இந்த நடவடிக்கை?
இது நடைமுறை மிகப்பெரிய பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்த விஷயத்தில் புதிய கேஒய்சி விதிமுறை எதுவும் கொண்டுவரப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
பழைய திட்டம் இது?
அந்த அறிவிப்பில் 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கேஒய்சி கட்டாயம் என்று கூறப்பட்டது. இதற்கு முன்னதாக பண மோசடி தடுப்புச் சட்டம் 2002ன் படி 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக நகை, தங்கம், விலைமதிப்பு மிக்க கற்கள் வாங்கினால் வாடிக்கையாளர் சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது.
கேஓய்சி கட்டாயம் இல்லை
இச்சட்டம் சர்வதேச அளவில் பண மோசடிகளைத் தடுக்கும் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் விதிமுறையாகும். சர்வதேச அளவில் பண மோசடிக் குற்றங்களைத் தடுக்கும் இந்த அமைப்பின் கீழ் 2010ம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது. இந்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பின் படி, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
ஆதார் அவசியமில்லை
குறைந்த மதிப்பிலான தங்கம், நகை, வெள்ளி வாங்குவதற்கு கேஒய்சி கட்டாயம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் குறைந்த அளவில் தங்கம் வாங்கும் சாமனியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக பெரிய அளவில் தங்கம் வாங்கி குவிப்பவர்களுக்கு தான் பிரச்சனையே.