இந்தியாவில் கோயில்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள் , அறக்கட்டளைகளிடம் பல ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக கோயில்களிடம் இருக்கும் தங்கம், மற்றும் பக்தர்கள் காணிக்கை ஆகியவையும் இதில் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள கோயில்களில் பக்தர்களால் பல நூற்றாண்டுகளாகச் செலுத்தப்பட்ட காணிக்கைகள் மூலம் 3,000 முதல் 4,000 டன்கள் வரை தங்கம் இருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்த தங்கம் கோயில்களின் பாதுகாப்பறைகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட கோயில்கள் வசம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளன. இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள், மத நிறுவனங்கள் வசம் இருக்கும் தங்க இருப்புகளை பணமாக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியாவில் உள்ள கோயில்களின் தங்க இருப்புகளுக்கு பதிலாக, மத்திய அரசு தங்க பத்திரங்களை வழங்க போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்தது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கோயில்களின் தங்க இருப்புகளுக்கு ஈடாக மத்திய அரசு கோயில்களுக்கு தங்கப் பத்திரங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கோயில்களின் தங்க இருப்புகளைப் பணமாக்குவதற்கான ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது அது உண்மை இல்லை என கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லது வேறு ஏதேனும் மத நிறுவனங்கள் வசம் உள்ள தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. இந்த தகவல் ஆதாரமற்றவை. இது போன்ற வதந்திகளை நம்பவோ பரப்பவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். அரசு திட்டங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும், அதிகாரப்பூர்வ பத்திரிகைகள், அரசு இணையதளங்கள் வாயிலாக மட்டும் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் போர் காரணமாக அந்நிய செலாவணியை சேமிக்க அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்நிலையில் தான் வீடுகளிலும் மத அமைப்புகளிடமும் தங்கம் எந்த பயணும் இல்லாமல் இருப்பதாகவும் அதனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் இத்தகைய தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

