இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் அலை ஓய்ந்து முடிந்திருக்கும் நிலையில், நோயல் டாடா சந்திரசேகரனுக்கு பெரிய செக் வைத்துள்ளார். நேற்று நடந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டு காலம் பதவி கொடுக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்த நோயல் டாடா, ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் கொடுத்த பங்கு விற்பனை தொடர்பான கோரிக்கையை டாடா சன்ஸ் நிர்வாகத்திற்கு அளித்துள்ளார்.
ஆகஸ்ட் மாத இறுதியில் நோயல் டாடா, சந்திரசேகரன், எஸ்பி குரூப் தலைவர் ஷாபூர்ஜி மிஸ்திரி ஆகியோர் மத்தியில் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது, இதைத் தொடர்ந்து எஸ்பி குரூப் டாடா டிர்ஸ்ட் அமைப்புக்குப் பங்கு விற்பனை திட்டத்தைச் சமர்ப்பித்தது.

இத்திட்டத்தின் படி ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கார்ப், சைரஸ் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரு மிஸ்திரி குடும்ப நிறுவனத்திடம் இருக்கும் டாடா சன்ஸ் பங்குகளை விதி 11UA கீழ் குறைந்தபட்ச தொகையை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்சம் 25000 கோடி ரூபாய் நிதியை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த பங்குகளை டாடா சன்ஸ் நிர்வாகமோ அல்லது டாடா குழும நிறுவனங்களோ வாங்கிக்கொண்டு அதற்கான நிதியைப் பெறவும் தயார் என்றும், இந்த பங்கு விற்பனை 2 கட்டமாக அடுத்த 18 மாதங்களுக்குள் நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளது.
இதைச் சமர்ப்பித்த டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா நிதியைத் திரட்டுவதற்கான வழிகளையும் தெரிவித்து, பங்கு கைப்பற்றலுக்கான National Company Law Tribunal ஒப்புதலையும் பெறுவதற்கான பணிகளையும் துவங்கப் பரிந்துரை செய்துள்ளார்.
இதை செயல்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தற்போது சந்திரசேகரன் உள்ளார், இந்த 25000 கோடி ரூபாய் என்பது டாடா சன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதியில் பெரும் பங்கு வகிக்கும் காரணத்தால் இதை எப்படிச் செயல்படுத்துவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 85 சதவீத பங்குகளை வெறும் 2 பிரிவினர் வைத்திருக்கின்றனர். டாடா குடும்பத்தினர் நடத்தும் பல்வேறு டாடா டிரஸ்ட் அமைப்பின் வாயிலாக சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். அடுத்தாக டாடா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான மற்றொரு வர்த்தக சாம்ராஜ்ஜியமான ஷாப்பூர்ஜி பலோன்ஜி குடும்பத்தின் டிரஸ்ட் அமைப்புகள் 18.20 சதவீதம் அளவிலான பங்குகளை வைத்துள்ளது.
இதில் ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அதீத கடனில் தவித்து வரும் வேளையில், டாடா சன்ஸ் பங்குகளை விற்பனை செய்தோ அல்லது அடமானம் வைத்தோ நிதியைத் திரட்டுவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ரத்தன் டாடா இருந்த காலத்திலேயே இதுதொடர்பாக வழக்குப் போடப்பட்டது. ஆனாலும் ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் டாடா சன்ஸ் பங்குகளை விற்க முடியாமல் தவித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வருடமாக டாடா சன்ஸ் நிர்வாகத்திடமே பங்குகளை விற்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் SP குரூப்-க்கு விடை தெரியாமல் நின்று வருகிறது. இந்த நிலையில் தான் நோயல் டாடா ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் கொடுத்த கோரிக்கையை டாடா சன்ஸ் நிர்வாகத்திடம் கொடுத்து சந்திரசேகரனுக்குக் கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications


