என்ன தான் அரசு தொடர்ந்து பலமுறை அறிவுறுத்தி வந்தாலும், பலர் சரியான நேரத்தில் ஜிஎஸ்டி செலுத்துவதில்லை. அதிலும் ஒரு முறைக்கு பல முறை கால அவகாசம் வழங்கினாலும் செலுத்துவதில்லை என்பது கவலையளிக்கும் விஷயமே.
இந்த நிலையில் அரசு கால அவகாசம் கொடுத்தும் ஜிஎஸ்டி செலுத்த தவறினால் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில் ஜிஎஸ்டி பதிவு பெற்ற ஏறக்குறைய 1 கோடிக்கும் அதிகமானவர்கள் உரிய நேரத்திற்கு வரி செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில் சரியான நேரத்தில் ஜிஎஸ்டியை செலுத்தவும், அதற்கான நடவடிக்கையை எடுக்கவும் அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடினமான நடவடிக்கை
மேலும் இவ்வாறு கடினமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் சரியான நேரத்தில் ஜிஎஸ்டியை செலுத்த வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு இவர்களிடம் கண்டிப்பை காட்டவும், முறையாக ஜிஎஸ்டி செலுத்துவோரிடம் இணக்கமாக உறவை ஏற்படுத்தும் யுக்தியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சட்டப் படி நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது
மேலும் இவ்வாறு வரி பாக்கி வைத்திருப்போர் மீது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகை செய்ய உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் வட்டாரத்தில், ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதிக்குள் அதாவது, ஜிஎஸ்டிஆர்-3ஏ செலுத்துவதற்கான கால வரையறைக்கு 3 நாட்களுக்கு முன்பே வரியை செலுத்தி விட வேண்டும்.
எச்சரிக்கை நடவடிக்கை
இவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் வரியை செலுத்தாவிட்டால், நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கை தகவல் உரியவருக்கு அனுப்பப்படும். இது தவிர 5 நாட்களுக்கு பிறகு எலக்ட்ரானிக் முறையில் நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் வரி பாக்கியை செலுத்த வேண்டியவருக்கு 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும். ஆனால் அப்படியும் எந்த பதிலும் வரவில்லை என்றால் வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் முடக்கப்படலாம்
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், பதிலளிக்க தவறுபவர்கள் மீது மீட்பு நடவடிக்கை தொடங்கலாம் எனவும், பாக்கியை செலுத்தாவிட்டால், சொத்துக்கள் முடக்கம் மற்றும் வங்கிக் கணக்கு முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நாட்டில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரே மந்த நிலை தாண்டவமாடுகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு அறிவிப்பானது சற்று கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
எது எப்படியோங்க, சரியான நேரத்தில் செலுத்த வேண்டிய வரியை செலுத்திவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லையே.


Click it and Unblock the Notifications