இந்தியாவில் தற்போது நாளுக்குநாள் மின்சார கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மின்சா கார்களுக்கு தேவையான பேட்டரி உற்பத்தியும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது மின்சார கார்களுக்கு தேவையான பேட்டரிகள் வெளிநாட்டிலிருந்து பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டிலேயே இந்த பேட்டரிகளை தயாரிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வேற லெவலில் முடிவு செய்துள்ளது.
இதற்காக இந்திய அரசுடன் ஓலா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு தேவையான எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி உள்ளூரிலேயே தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளது.
ஓலா எலக்ட்ரி கார்
இந்திய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் கார் நிறுவனம் ஜூலை 28 அன்று, நாட்டில் மேம்பட்ட பேட்ட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், ஓலா எலக்ட்ரிக் தனது லட்சிய ரூ.80,000 கோடி மதிப்புள்ள பேட்டரி பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய மின்சார வாகன நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
உள்நாட்டு பேட்டரி
இதுகுறித்து ஓலா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறியபோது, 'இன்று, பேட்டரி உற்பத்திக்கான உலகளாவிய திறனில் 90 சதவீதம் சீனாவில் உள்ளது. மேலும் இந்த இறக்குமதி சார்புநிலையை மாற்றியமைக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரி தொழில்நுட்பம் முக்கியமானது.
பேட்டரி உற்பத்தியில் தன்னிறைவு
ACC PLI திட்டம் இந்தியாவை பேட்டரி உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்வதற்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் மிக முக்கியமான அம்சங்களை உள்ளூர்மயமாக்குவதற்கும் கருவியாக இருக்கும். ஓலாவில், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் தீவிர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், தயாரிப்புகள், இயக்கம், சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு வலுவான நிறுவனமாக எங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்றும் பவிஷ் அகர்வால் மேலும் தெரிவித்தார்.
லித்தியம்-அயன் பேட்டரி
சமீபத்தில் ஓலா இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி NMC 2170 ஐ வெளியிட்டது. மேலும் உள்நாட்டு மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பங்களை உருவாக்க ஆர்&டியை மேம்படுத்துவதில் ஓலா முதலீடு செய்துள்ளது.
பேட்டரி கண்டுபிடிப்பு மையம்
ஓலாவின் வரவிருக்கும் பேட்டரி கண்டுபிடிப்பு மையம் (Battery Innovation Center), ஆகஸ்ட் முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இது உலகின் முக்கிய பேட்டரி தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பேட்டரி கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவிலிருந்து மூலப்பொருளாக இருக்கும்" என்று ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.