இந்திய எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிதாக மிகப்பெரிய திட்டத்துடன் இறங்கியுள்ளது ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் ஓலா முன்கூட்டியே தனது எதிர்காலத்தைச் சுதாரித்துக் கொண்டு ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைந்துள்ளது.
ஓலா நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் இதுவரையில் நேரடியாக இறங்கியது இல்லை என்பதால் பாதுகாப்பாக, உலகம் முழுவதும் தற்போது புதிதாகவும், வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதைவிடவும் முக்கியமாக ஓலா கார் தயாரிப்பில் இறங்காமல் இருசக்கர வாகன பிரிவில் இறங்கியது இன்னமும் ஸ்மார்ட்டான மூவ்.
ஓலா பியூச்சர்பேக்ட்ரி
ஓலா தனது இரு சக்கர வாகனங்கள் உற்பத்திக்காகக் கிருஷ்ணகிரியில் ஓலா பியூச்சர்பேக்ட்ரி என்ற பெயரில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் ஒரு பகுதி முதற்கட்ட உற்பத்தி பணிகளுக்காக இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மொத்தமும் பெண்கள்
இந்த எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் ஓலா பியூச்சர்பேக்ட்ரி மொத்தமும் பெண்களால் இயங்கக் கூடிய தொழிற்சாலையாக இருக்கும் என அறிவித்துள்ளார் ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால். இந்தத் தொழிற்சாலை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பின்பு குறைந்தது 10000 பெண்கள் இத்தொழிற்சாலையில் பணியாற்றுவார்கள் எனப் பாவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.
Aatmanirbhar Bharat requires Aatmanirbhar women!
— Bhavish Aggarwal (@bhash) September 13, 2021
Proud to share that the Ola Futurefactory will be run ENTIRELY by women, 10,000+ at full scale! It’ll be the largest all-women factory in the world!!🙂
Met our first batch, inspiring to see their passion!https://t.co/ukO7aYI5Hh pic.twitter.com/7WSNmflKsd
பாவிஷ் அகர்வால் அசத்தல்
இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள ட்வீட்டில் Aatmanirbhar Bharat திட்டத்திற்கு Aatmanirbhar Women வேண்டும்! ஓலா பியூச்சர்பேக்ட்ரி மொத்தமும் பெண்களால் இயங்கும் ஒரு தொழிற்சாலையாக இருக்கும் என்பதை அறிவிக்கப் பெருமையாக உள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
India’s women will bring the EV revolution from India to the world!
— Bhavish Aggarwal (@bhash) September 13, 2021
When women are equal participants in India’s economic growth, India will lead the world!#JoinTheRevolution pic.twitter.com/65LBJOcykM
உலகளவில் ஓலா டாப்பு
இதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிகப் பெண்களால் இயங்க கூடிய தொழிற்சாலையாகவும் ஓலா பியூச்சர்பேக்ட்ரி இருக்கும் எனத் தெரிவித்து, தேர்வு செய்யப்பட்ட முதல் பகுதி பெண் ஊழியர்கள் இருக்கும் வீடியோ-வை வெளியிட்டுள்ளார் பாவிஷ் அகர்வால்.
உற்பத்தித் துறை சார்ந்த பயிற்சி
ஓலா பியூச்சர்பேக்ட்ரி-க்குச் சேர்வு செய்யப்படும் பெண்கள் அனைவருக்கும் உற்பத்தித் துறை சார்ந்த திறன்கள் பயிற்சி அளிக்கப்படும். இத்தொழிற்சாலையில் மொத்த உற்பத்தி பணிகளையும் பெண்கள் தான் நிர்வாகம் செய்ய உள்ளதால் இத்துறை திறன்களை முழுமையாகப் பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
பொருளாதார வாய்ப்பு
பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அளிப்பது அவர்களுக்கானது மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தைத் தாண்டி மொத்த இந்தியாவுக்கும் வாய்ப்பாக இருக்கும்.
27% வளர்ச்சி வாய்ப்பு
சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆய்வில் இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறையிலும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் 27 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கூறப்பட்டு உள்ளது.
பெண்களின் பங்கீடு
இந்திய உற்பத்தித் துறையில் பெண்களின் பங்கீடு என்பது வெறும் 12 சதவீதம் மட்டுமே, அதிலும் இந்த அளவீடு சிறு நிறுவனங்களில் மட்டுமே, பெரிய உற்பத்தி நிறுவனங்களில் பெண்களுக்கான இடம் மிகவும் குறைவு. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஓலா-வின் இந்த முடிவு பாராட்டுக்குரியது..!
தமிழ்நாடு முன்னோடி
பெண்களுக்குக் கல்வி, பெண்களுக்குச் சம உரிமை, பெண்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு என அனைத்திலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஓலா பியூச்சர்பேக்ட்ரி அமைத்துள்ளதால் பெண் ஊழியர்கள் பெறுவதில் எவ்விதமான தடையும் இருக்காது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு
இந்த மாற்றம் மூலம் இனி வரும் காலகட்டத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு படிப்பில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் வியப்பு இல்லை. ஓலா நிறுவனர் எடுத்துள்ள இந்த முடிவு தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புவோம்.
அனைத்து துறையிலும், பெண்கள் பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.