பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்தியாவிலும் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை முன்பதிவு செய்து வாங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாட்டின் பல நகரங்களில் சில்லரை விற்பனை கடைகளை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்
எலக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் தனது ஓலா எஸ்1 ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் இந்த ஸ்கூட்டர் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை என்பதால், நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் ஓலா எலக்ட்ரிக் சில்லரை விற்பனை மையங்களை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
200 சில்லரை விற்பனை கடைகள்
அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 200 சில்லரை விற்பனைக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஓலா செயலி மூலம் ஆன்லைனில் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது சில்லறை கடைகளை திறப்பதால் கூடுதல் விற்பனை நடைபெறும் என்று ஓலா நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஓலா எஸ்1 ப்ரோ
ஓலா நிறுவனம் சமீபத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் விலையுள்ள எஸ்1 ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தாலும் அந்த ஸ்கூட்டர் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் குறைவான ஓலா எஸ் என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் ஒரே நாளில் பத்தாயிரம் யூனிட் விற்பனையாகி சாதனை செய்தது. எனவே ஓலா நிறுவனம் எஸ் மாடல் ஸ்கூட்டரை அதிக உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு
சமீபத்தில் ஓலா நிறுவனம் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதால் கூடுதல் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த பேட்டரி
மேலும் ஓலா நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சொந்தமாகவே பேட்டரிகளை உருவாக்க விரும்புகிறது என்றும் அது வாகனத்தின் தரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு அறிமுகமாகும் எலக்ட்ரிக் கார்களுக்கு சொந்தமாக தயாரிக்கும் பேட்டரிகளை பயன்படுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் கூறி வருகிறது.
பேட்டரி ஆலை
பெங்களூரில் பேட்டரி ஆலை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கான ஓலா நிறுவனம் சுமார் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் கூறி உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில் அதன் அருகே பேட்டரிகள் தயாரிக்கப்படும் ஆலை தொடங்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications