தங்கத்திற்கும் இந்தியர்களுக்கும் இடையிலான உறவு நகமும் சதையும் போன்றது. என்னதான் தங்கம் விலை உயர்ந்தாலும் நகை கடைகளில் கூட்டம் குறைவதில்லை. ஏனெனில் தங்கம் வாங்குவது என்பது இந்தியர்களின் கலாச்சாரத்துடன் ஒன்றி போனது. இதனால் தான் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சத்தை கடந்தும் மக்கள் தங்களால் இயன்ற அளவுக்காவது தங்கம், வாங்க வேண்டும் என வாங்கி வைக்கிறார்கள்.
இந்தியா தங்கத்தை பெரும்பாலும் இறக்குமதி தான் செய்கிறது. இதற்காக அமெரிக்க டாலரை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. ஈரான் போர் சூழல் காரணமாக கையிருப்பில் இருக்கும் டாலரை கொண்டு கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதால் மக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார். இதனை அடுத்து மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15%ஆக உயர்த்தியது.

இறக்குமதி வரி உயர்வை நகை விற்பனையாளர்கள் மக்கள் மீதே சுமத்துகின்றனர். இன்றைய தினம், ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,430 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,15,440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த பிப்ரவரி முதலே ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் நிலையில் மக்கள் தங்கம் வாங்க மாற்று வழிகளை கையாள தொடங்கியுள்ளனர். அதாவது கையில் பணமில்லை என்றால் என்ன பழைய தங்கம் தான் இருக்கிறதே என யோசிக்க தொடங்கியுள்ளனர்.
இன்றைய தேதிக்கு ஒரு சவரன் தங்கம் வாங்கவே 1.33 லட்சம் ரூபாய் தேவை. பெரும்பாலான மக்களுக்கு இது 4 முதல் 5 மாத கால சம்பளம். எனவே தான் பணத்தைக் கொடுத்து தங்கம் வாங்குவதற்குப் பதிலாக, தங்களிடம் உள்ள பழைய நகைகளைக் கொடுத்துப் புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளும் (Old Gold Exchange) போக்கு இந்தியர்களிடையே கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு முன்னணி நகைக்கடைகளிலும் இந்த வகையான பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டை விட 60% வரை அதிகரித்துள்ளதாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. முன்னணி நகைக்கடை நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனையில், பாதியளவு விற்பனை பழைய நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலமே நடக்கிறதாம். குறிப்பாக் அரசு தங்கம் மீதான இறக்குமதி உயர்த்தியது முதலே இந்த எக்ஸ்சேஞ் டிரெண்ட் தொடங்கி இருப்பதாக தங்க நகை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஜாய் ஆலுக்காஸ் நிறுவன மேலாளர்கள் அளித்த தகவலின் படி, முன்பு இவர்களது விற்பனையில் பழைய நகை கொடுத்து புது நகை வாங்குவது 40-45% ஆக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது அது 65% ஆக உயர்ந்துள்ளது, சில நாட்களில் இது 70% வரை கூடச் செல்வதாக கூறுகின்றனர்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறுகையில், இறக்குமதி வரி உயர்வுக்கு பின், தங்கள் கடைகளில் பழைய நகை மாற்றும் வர்த்தகம் 30%-லிருந்து 45% ஆக உயர்ந்துள்ளது என கூறுகிறார். அதே போல தனிஷ்க் நிறுவனத்தின் நகைப்பிரிவு முதன்மை நிர்வாகி அருண் நாராயண் கடந்த 8 மாதங்களில் மட்டும் சுமார் 4.4 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களிடம் 10 டன் எடையுள்ள பழைய நகைகளை மாற்றியுள்ளனர் என்கிறார்.
மக்கள் பழைய நகைகளை மாற்றி புது நகை வாங்குவது இந்திய பொருளாதாரத்திற்கு நல்லது. ஏனெனில் நகை கடைகள் புதிதாக தங்கம் வாங்க வேண்டியதில்லை பழைய நகையை கொடுத்து ரீசைக்கிளிங் செய்து கொள்வார்கள். எனவே இறக்குமதி குறைந்து டாலர் செலவும் குறையும். அதே வேளையில் இந்திய குடும்பங்கள் வசம் கிடக்கும் தங்கமும் படிப்படியாக வெளியே வரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


