சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம். முதலில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ஓமந்தூரார் வளாகம் சட்டமன்றமாக தான் கட்டப்பட்டது. பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
ஓமந்தூரார் வளாகம் பெரிய இடத்தை கொண்டிருக்கிறது, இங்கே மருத்துவமனை தாண்டி வேறு வசதிகளையும் கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் லண்டன் போன்ற முக்கிய உலக நகரங்களின் Town Square மாடலில், பொதுமக்களை ஈர்க்கும் நவீன பொழுது போக்கு இடமாக இதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வந்து பொழுதை போக்கி செல்லும் இடமாக மாற்றப்படவுள்ளதாம். அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் இதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.முதல் கட்டமாக அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் பணிகள் தொடங்கப்படும். இதில் சிறு உணவகங்கள், சிறிய வணிக கடைகள் மற்றும் இருக்கை வசதிகள் உருவாக்கப்படும்.
அடுத்ததாக திறந்தவெளி நூலகம் , நடைபாதை ஆகியவை அமைக்கப்படும். இது வெறும் வணிக மையமாக இல்லாமல், அன்றாடம் மக்கள் வந்து செல்லும் பொது இடமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். மேலும் கொரோனா பெருந்தொற்றின் போது உயிர்த்தியாகம் செய்த முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளது.
கண்காட்சிகள், கைவினை பொருள் சந்தைகள் மற்றும் வார இறுதி நாட்களை மக்கள் மகிழ்ச்சியாக போக்கும் வகையிலான நிகழ்வுகள் நடத்த ஏதுவாக தனி இடம் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தியான இடங்கள் ,இருக்கை வசதிகள் ஆகியவையும், கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக படிக்கட்டு முறை இருக்கை அமைப்புகளுடன் கூடிய திறந்தவெளி அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு இடமாக ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தை மாற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் இருப்பதால் இந்த இடம் அதிக எண்ணிக்கையில் மக்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டி கத்திப்பாரா பாலத்தில் இப்படி அமைக்கப்பட்ட பொழுது போக்கு இடத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக வார இறுதி நாட்களில் கிண்டி கத்திப்பாரா அர்பன் ஸ்கொயரில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து உணவு உண்பது , பிள்ளைகளுடன் விளையாடுவது என பொழுதை போக்குகின்றனர். அதே போன்ற ஒரு இடமாக ஓமந்தூரார் வளாகத்தையும் மாற்றுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இருந்தாலும் நோயாளிகள் வந்து செல்லும் இடமாக இருப்பதால் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வந்து செல்லும் இடமாக இருந்தால் மக்களின் வரவேற்பை பெறும் என்பதை மறுப்பதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications


