தமிழ்நாட்டை சேர்ந்த கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கியமான ஒரு அறிவிப்பை பொது விநியோக துறை வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு, முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டியவர்கள் இந்த அறிவிப்பை தெரிந்து கொள்வது நல்லது.
தமிழ்நாட்டில் மாதம் தோறும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டத்திலும் ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மக்கள் இதில் பங்கேற்று ரேஷன் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறலாம்.

இந்த முகாமில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை தொடர்பான விண்ணப்பம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம் ,முகவரி மாற்றம், கைபேசி எண் புதுப்பித்தல், ரேஷன் கார்டு தொடர்பான குறைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெற முடியும்.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைப்பதற்கான முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு தான் உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு தான் அடிப்படை. அதுமட்டுமில்லாமல் இலவச அரிசி, மானிய விலை பொருட்களை வாங்கவும் ரேஷன் கார்டு தேவை. எனவே ரேஷன் கார்டில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை அப்டேட்டாக வைத்திருந்தால் தான் அரசின் நலத்திட்டங்கள் நமக்கு தடையின்றி கிடைக்கும்.
குறிப்பாக இலவச அரிசியை தொடர்ந்து பெற கேஒய்சி புதுப்பிப்பது நல்லது. எனவே ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டியவர்கள், கேஒய்சி புதுப்பிக்க வேண்டியவர்கள் இந்த முகாமுக்கு சென்றால் ஒரே நாளில் வேலை முடியும். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு சென்று இந்த முகாமில் பங்கேற்கலாம். ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொருள் பெற முடியாத மாற்றுத்திறனாளி நபர்களுக்கான அங்கீகார சான்று இந்த குறை தீர்ப்பு முகாம்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றையும் இந்த முகாம்கள் வாயிலாக மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொருத்தவரை சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை போலவே அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் தவறாமல் இங்கே சென்று கேஒய்சி அப்டேட் செய்து கொண்டால் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications

