இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசும், உற்பத்தித் துறையும் பெரிய அளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பெரிய அளவில் நம்பியுள்ளது. இந்திய உற்பத்தித் துறையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி நிறுவனங்கள் MSME நிறுவனங்கள் என்பதால் குறுகிய காலகட்டத்தில் அதிக உற்பத்தியை அடையவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு MSME நிறுவனங்களுக்கு அதிகளவிலான சலுகைகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் MSME நிறுவனங்களை டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் இத்துறைக்காகப் பிரத்தியேகமாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு ஒரு மொபைல் ஆப் குறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலில் போது அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆப் மூலம் MSME நிறுவனங்கள் பதிவு செய்வது முதல் ஜிஎஸ்டி வரி செலுத்துதல், கடன் சேவைகள், உற்பத்தி நிர்வாகம், வர்த்தக நிர்வாகம் என அனைத்தையும் ஓரே இடத்தில் பெறும் வகையில் மத்திய அரசு உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த மொபைல் செயலி MSME நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் சேவையைப் பயன்படுத்துவதற்கு ஒரு பாலமாக இருக்கும் என அறியப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பும், லாக்டவுன் அறிவிப்பும் MSME துறையின் வர்த்தகத்தை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டாலும், சரிவில் இருந்து பெரும்பாலான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
MSME நிறுவனங்களுக்கான 59 நிமிடத்தில் 10 கோடி ரூபாய் வரை கடன் சேவை இத்துறைக்குப் பெரிய அளவில் பயன் அளித்துள்ளது என்றால் மிகையில்லை. இதேபோல் மத்திய அரசு சரிவில் தத்தளிக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்தது. இதில் பெரும்பாலான திட்டங்களும் அறிவிப்புகளும் MSME நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தது.