நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே மந்தமாக இருக்கும் நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்கள் நிறுவன வளர்ச்சி, வர்த்தக மேம்பாடு, வர்த்தக விரிவாக்கம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடன் அளவு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளில் நிறுவனங்கள் வாங்கிய கடன் அளவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பது முக்கியமான ஒன்று.
அதிரடி உயர்வு
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடன் அளவுகள் 6.5 சதவீதம் வரையில் அதிகரித்து 2.12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1.99 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 நவம்பர் மாதத்தில் பெற்ற 2, 11, 53, 22, 022 அமெரிக்க டாலர் கடனை இந்திய நிறுவனங்கள் external commercial borrowing (ECB) வழியாகப் பெற்றுள்ளது.
அதிகக் கடன் பெற்ற நிறுவனங்கள்
இக்காலகட்டத்தில் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் 500 மில்லியன் டாலர், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் 400 மில்லியன் டாலர், ஓஎன்ஜிசி 300 மில்லியன் டாலர் மற்றும் JSW நிறுவனம் 250 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற முக்கிய நிறுவனங்கள்
இவர்களோடு ஹோம் கிரெடிட் இந்தியா பைனான்ஸ் தனது கடன் கொடுக்கும் வர்த்தகத்தை அதிகரிக்க 61.58 மில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டு வங்கிகளில் கடனாகப் பெற்றுள்ளது.
மேலும் உற்பத்தி நிறுவனமான நிப்ரா இந்தியா கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தை மேம்படுத்தும் திட்டத்தில் அதிநவீன இயந்திரங்களை நிறுவத் திட்டமிட்டு சுமார் 52.1 மில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கடனாகப் பெற்றுள்ளது.
எக்சான் மொபைலி
இந்தியாவில் தனது வர்த்தகச் செலவிற்காக எக்சான்மொபைலி சர்வீசஸ் மற்றும் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார் 30 மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் இருந்து சுமார் 30 மில்லியன் டாலரை கடனாகப் பெற்றுள்ளது.
இதேபோல் ஓவென்ஸ் கார்னிங் நிறுவனமும் வெளிநாட்டு வங்கிகளில் இருந்து 30 மில்லியன் டாலர் தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது.
மசாலா பத்திரங்கள்
முக்கியமாக Margdarshak பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தனது இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் நிதி திட்டங்கள் தவிர மற்ற வர்த்தகச் சேவை மேம்பாட்டிற்காக வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்கள் சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு முதலீட்டை ஈட்டியுள்ளது. இதுவும் ஒருவகையிலான கடன் என்பது குறிப்பிடத்தக்கது.