டெல்லி: மோடி 2.0 அரசு அமைந்த பின், பல அதிரடி திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள்.
Unlawful Activities (Prevention) Act தொடங்கி ஒட்டு மொத்த இந்தியாவிலும் சூடு பிடித்து ஓடிக் கொண்டு இருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா வரை திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
பட்ஜெட் 2020-ல் கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள்ளேயே, மத்திய அரசு இன்னொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
மத்திய அரசு அறிவிப்பு
கடந்த புதன் கிழமை, மத்திய அரசு, விவசாயிகளுக்கான பயிர் காப்பிட்டுத் திட்டத்தை விருப்பப்பட்டவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறது. தற்போது விவசாய பயிர் கடன் வாங்கி இருப்பவர்கள், தங்கள் கடனோடு வாங்கிக் கொள்ளலாம் அல்லது புதிதாக எடுத்துக் கொள்ளலாம் எனச் சொன்னது. இதற்கு ப சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ப சிதம்பரம்
உறுதியான பாசன வசதி இல்லாத நிலங்களில், விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டமே பாதுகாப்பு என்று உணர்ந்து இருந்தது காங்கிரஸ். ஆகையால் தான் அந்த திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இந்த பயிர் இன்சூரஸ் திட்டத்தை பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்து, இப்பொழுது முற்றிலும் காலி செய்ய முடிவெடுத்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
ப சிதம்பரம் 2
மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் "இந்த பயிர் இன்சூரன்ஸ் பிரிமியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இனி குறைக்கப்பட இருக்கிறது. வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு இனி பயிர் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த மாற்றங்களின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" எனவும் எச்சரித்து இருக்கிறார் சிதம்பரம்.
ப சிதம்பரம் 3
"நம் இந்திய தேசத்தில் முறையாக பயிர் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இணைந்து இருக்கும் விவசாய நிலங்களின் பரப்பளவே குறைவு. இந்த நேரத்தில் மேலே சொன்ன முடிவுகளை எடுத்தால் மேலும் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறையும். இந்த முடிவால் அதிகம் பாதிக்கப்பட இருப்பது நம் விவசாயிகள் தான்" எனச் சொல்லி இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம்.
பாஜக விளாசல்
தற்போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின், நீண்ட கால தொலை நோக்கு பார்வை இல்லாத நடவடிக்கைகளுக்கு இதுவும் ஒரு சான்று. பாரதிய ஜனதா கட்சிக்கு, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் விளாசி இருக்கிறார்.