டெல்லி : இந்தியாவில் தான் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, வாராக்கடன், கடன் என ஆட்டிப்படைத்து வருகிறது எனில், மறுபுறம் பாகிஸ்தானிலும் இதே பிரச்சனை தான். அதிலும் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டித்த பின்னர் பாகிஸ்தான் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
உதாரணத்திற்கு ஒரு கிலோ தக்காளியின் விலை அங்கு 300 ரூபாயாம். இந்த நிலையில் அங்கு வங்கிகளில் வாராக்கடன் அளவும், இந்தியாவைப் போல் இமயம் அளவு உயர்ந்துள்ளதாம்.
வாராக்கடன் அதிகரிப்பு
ஒரு நாட்டில் உள்ள வங்கிகளில் வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்தது எனில் அந்த நாடு, கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து வருவதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது பாகிஸ்தானிலும் இதே பொருளாதார மந்த நிலை தான். இந்த நிலையில் அந்த நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2018 - 2019ல் பாகிஸ்தானில் உள்ள வங்கியின் வாராக்கடன் அளவு 23 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலையே காரணம்
இதற்கு முக்கிய காரணம் நலிவடைந்து வரும் மந்தமான பொருளாதார மந்த நிலையே காரணம் என்றும் அவ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் நிலவி வரும் மந்த நிலையால் பணப்புழக்கமும் குறைந்துள்ளது,. குறிப்பாக கார்ப்பரேட்களின் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையிலேயே நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் இறுதிக்குள் வாராக்கடன் அளவு 23.2 சதவிகிதம் அதிகரித்து 76,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று கடந்த திங்கட் கிழமையன்று ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த துறை பாதிப்பு
குறிப்பாக இந்த வாராக்கடன் அளவு எரிசக்தி துறை மற்றும் சர்க்கரை துறைகளில் மிக அதிகமாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானிய வங்கி துறைகள் மிக பலவீனமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிலும் அப்படித் தான்
கடந்த ஜூன் மாதத்தில் மொத்த வாராக்கடன்களின் அளவும் 8.38 சதவிகிதம் அதிகரித்ததாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் ஒப்பிடும்போது 7.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 2019 நிலவரப்படி, இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு 9.4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எஸ்.பி.ஐ முக்கிய பங்கு
குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரித்து வரும் நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த அளவில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. இதில் ரிசர்வ் வங்கியின் தகவல்படி கடந்த மார்ச் 31. 2019ன் படி, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு 7.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது கடந்த மூன்று நிதியாண்டுகளில் 10.77 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்திய அரசு தீவிர நடவடிக்கை
மோசமாக இந்த வாராக்கடன் பிரச்சனையில் வங்கிகளை விடுவிக்க மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வங்கிகளை சீரமைக்க மூலதனம் உட்புகுத்தல் மற்றும் பல பொதுத்துறை வங்கிகளை இணைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது. இதனால் பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், இது சிறப்பான வெளியீட்டை தருவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் கருதப்படுகிறது.