இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களுக்குப் பின் இந்தியா-சீனா இடையேயான நட்புறவு மிகப்பெரிய அளவில் விரிசல் அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் தற்போது வர்த்தக உறவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சீன செயலிகளுக்குத் தடை விதித்தது மட்டும் அல்லாமல் இந்தியச் சந்தையில் சீன முதலீடுகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்துள்ளது.
ஆனால் இந்தியா போன்ற ஒரு வர்த்தகத் தளத்தைச் சீனா விடக்கூடாது என்பதற்காகப் பல வகையில் முயற்சி செய்து தற்போது தனியார் வங்கியில் முதலீடு செய்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
இந்திய அரசு சீன முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த வேலையில் சீனாவின் இந்த முதலீடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரயில்வே முதல் டிக்டாக் வரை
கல்வான் தாக்குதலுக்குப் பின் இந்தியச் சீனா இடையேயான வர்த்தக நட்புறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டதில், 60க்கும் மேற்பட்ட சீன செயலிகளையும், சீன முதலீடுகளுக்கு அதிரடி தடையும், ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட ஆட்டோமொபைல் துறை சார்ந்த முதலீடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதுமட்டும் அல்லாமல் இந்திய அரசுத் துறைகளில் சீன நிறுவனங்களுடனான கூட்டணியில் உருவாக்கும் அனைத்து திட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. இதிலும் குறிப்பாக இந்திய ரயில்வே துறையில் சீன நிறுவன கூட்டணியில் 470 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீன முதலீடு
இப்படிப் பல வழிகளில் இந்திய அரசு சீன முதலீடுகளுக்குத் தடை விதித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்படும் வேலையில் சீனாவின் People's Bank of China ஐசிஐசிஐ வங்கியின் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான QIP பங்கு விற்பனை திட்டத்தில் சுமார் 15 கோடி ரூபாய் முதலீடு செய்து ஐசிஐசிஐ வங்கியின் 0.006 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
ஹெச்டிஎப்சி
மார்ச் மாதத்தில் இதேபோன்று ஹெச்டிஎப்சி வங்கியில் People's Bank of China அதிகளவிலான முதலீட்டில் சுமார் 1 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில், திரும்பவும் ஐசிஐசிஐ வங்கியில் சீன வங்கி முதலீடு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
ஹெச்டிஎப்சி முதலீடும் அதற்கான எதிர்ப்பு எழுந்த சில மாதங்களில் ஐசிஐசிஐ வங்கியின் சீன வங்கி முதலீடு செய்துள்ளது, இந்திய வங்கிகள் மீதான அவர்களின் ஈர்ப்பை வெளிப்படையாகக் காட்டுகிறது. இந்த ஈர்ப்பு பல்வேறு எச்சரிக்கையை இந்திய வங்கித்துறையில் ஏற்படுத்தியுள்ளது என இந்திய வர்த்தக அமைப்பு (CAIT) தலைவர் பிசி பார்தியா தெரிவித்துள்ளார்.
திரும்பக் கொடுக்க வேண்டும்
இதுமட்டும் அல்லாமல் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகள் சீன முதலீட்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய வர்த்தக அமைப்பு (CAIT) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
இதேபோன்று People's Bank of China அம்புஜம் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 0.32 சதவீத பங்குகளையும், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் 0.32 சதவீத பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது.
மேலும் ஜூன் மாதத்தில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் கூடுதல் முதலீடு செய்து People's Bank of China தனது பங்கு இருப்பை 0.32 சதவீதத்தில் இருந்து 0.33 சதவீதமாக உயர்த்தியது.
மொத்த முதலீடு
மார்ச் 2020 முடிவில் HDFC, Asian Paints மற்றும் Ambuja Cements ஆகிய நிறுவனங்களில் People's Bank of China செய்த மொத்த முதலீடு 4,418 கோடி ரூபாய். இந்த முதலீடு பெரிய தொகை இல்லை என்றாலும், சீனாவின் முதலீட்டு மற்றும் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் கொள்கையில் இதுவும் ஒன்றாகவே பார்க்கவேண்டியது தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமானதாக உள்ளது.