பெட்ரோல் டீசல் விலையானது இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் செஞ்சுரி அடித்துள்ளது.
இதன் எதிரொலியாக பல பொருட்களின் விலையும் தொடர்ச்சியாக ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாதா? என கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டு வருவதால், அதன் விலையானது முறையே ரூ. 75 மற்றும் ரூ.68 ஆக குறையும் என எஸ்பிஐ தனது பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெரும் பாதிப்பு இருக்காது
இந்த அடிப்படை விலையினால் மத்திய மாநில அரசுகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும். அதாவது இது மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவீதம் மட்டுமே. ஆக இது பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது என்றும் எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈகோராப் அறிக்கையில், எஸ்பிஐ-யின் மூத்த பொருளாதார நிபுணர் சவுமியா காந்தி கோஷ் விரிவாக கூறியுள்ளார், வாருங்கள் பார்க்கலாம்.
ஜிஎஸ்டியின் கீழ் ஏன் கொண்டு வரப்படவில்லை
பெட்ரோல் டீசல் மூலம் விற்பனை வரி மற்றும் வாட் வரி என்பது அரசின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பதால், ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் விரும்பவில்லை என காந்தி கூறுகிறார். ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும், அம்மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப வரியை குறைத்தும், அதிகரித்தும் வருகின்றனர்.
மக்கள் பாதிப்பு
ஆக ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் அவ்வாறு செய்ய இயலாது. கச்சா எண்ணெய் விலை, போக்குவரத்து கட்டணம், டீலர் கமிஷன், மத்திய அரசினால் விதிகப்பட்ட பிளாட் கலால் வரி உள்ளிட்டவற்றை கணக்கிடும்போது எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிக்கின்றன. இது நேரிடையாகவும், மறைமுகமாகவும் மக்களிடமே வசூலிக்கப்படுகிறது.
எப்படி சாத்தியம்
அதெல்லாம் சரி பெட்ரோல் விலை ரூ.75 மற்றும் டீசல் விலை 68 ரூபாய் என்பது எப்படி சாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள். இது பின்வரும் அனுமானங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிள்ளது.
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலர்கள். ஒரு டாலரின் எக்ஸ்சேஞ்ச் விகிதம் ரூ.73. இதற்கு போக்குவரத்துக் கட்டணம் டீசலுக்கு 7.25 ரூபாயும், பெட்ரோலுக்கு 3.82 ரூபாய். டீலர் கமிஷன் டீசலுக்கு 2.53 ரூபாயும். இதே பெட்ரோலுக்கு 3.67 ரூபாய், இதே செஸ் வரியாக பெட்ரோலுக்கு 30 ரூபாயும், டீசலுக்கு 20 ரூபாய். ஜிஎஸ்டி விகிதம் 28%, பெட் ரோல் நுகர்வானது ஆண்டுக்கு ஆண்டு 10%மும், டீசல் 15%ம் அதிகரிக்கிறது.
சாமனியர்களுக்கு என்ன பலன்
அதிக வரியை விதிக்கும் மாநில அரசுகள் இந்த ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டால், வரி வருவாயினை இழப்பார்கள். ஆனால் பின்னர் இந்த வரி வருவாய் சீராகிவிடும் எங்கள் கணிப்புப்படி சாமனியர்கள் மீதான வரிச்சுமையை கிட்டதட்ட 10 - 30 ரூபாயினை குறைக்க முடியும். கூடுதலாக இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உத்திரபிரதேசம் போன்ற அதிக வரியில்லாத மாநிலங்களூக்கு இது பயனுள்ள திட்டமாக இருக்கும் என்றும் எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
அரசுக்கும் இந்த சமயத்தில் மிச்சமாகும்
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 டாலர்கள் குறையும்போது, பெட்ரோல் டீசல் விலை முறையே ரூ.75 மற்றும் ரூ.68 என வைத்துக் கொண்டால், மத்திய மாநில அரசுகளுக்கு 18,000 கோடி ரூபாயினை மிச்சப்படுத்த முடியும். ஆக மொத்தத்தில் அரசுக்கும் இதனால் பெரிய இழப்பு ஏற்படாது.
தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன்
சில தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வருவது குறித்து, இது வரவேற்கதக்க விஷயம். பெட்ரோல் டீசல் விலை உயர்வு உணவு பணவீக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடும். ஆக இது ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது நல்ல விஷயம் தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.