டெல்லி : வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித்துறை இப்போது நிரந்தர கணக்கு எண்ணுக்கு (பான்) பதிலாக, 12 இலக்க பயோமெட்ரிக் எண்ணை அனுமதித்துள்ளது.
இந்த நிலையில் பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை மேற்கோள் காட்டும்போது கவனமாக இருங்கள், நீங்கள் தவறான எண்ணைக் கொடுப்பதால் 10,000 ரூபாய் அபராதம் கொடுக்கலாம்.
ஆக மக்கள் எங்கு எப்போது ஆதார் எண்ணையோ பான் எண்ணையோ கொடுக்கும் போது, சரிபார்த்து மிக கவனமாக கொடுக்க வேண்டும்.
வருமான வரி சட்டம்
நிதி மசோதா 2019ல் முன்வைக்கப்பட்டுள்ள படி, வருமான வரி சட்டம் 1961ன் கீழ், சமீபத்திய திருத்தங்கள் படி, மக்கள் பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் தவறான ஆதார் எண்ணைக் கொடுத்தால், அதற்காக அபராதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பான் எண்ணும் கட்டாயம்
பான் எண்ணுக்கு பதில் ஆதார் எண் சில சந்தர்ப்பங்களில் பொருந்தும் என்றாலும், சில இடங்களில் பான் எண்ணும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருமான வரி தாக்கல், வங்கி கணக்கை திறக்க, டீமேட் கணக்கு திறக்க, மேலும் 50,000 ரூபாய்க்கு மேற்கொண்ட மதிப்பு கொண்ட பரஸ்பர நிதி பத்திரங்கள், பத்திரங்கள் போன்ற இடங்களில் பான் எண்ணும் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் எண் UIDAI ஆல் வழங்கப்பட்டாலும், அபராதம் வருமான வரி துறையால் விதிக்கப்படுகிறது.
பான்- ஆதார் தவறாக கொடுத்தால் அபராதம்
வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், யாராவது வருமான வரித்துறையின் கீழ், யாராவது தவறான பான் எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், ரூ.10,000 அபராதம் வரை அபராதம் விதிக்கக் கூடும். இந்த நிலையில் பான் எண்ணுக்கு பதிலாக கொடுக்கப்படும் ஆதார் எண் தவறாக இருக்கும் பட்சத்தில் அதற்கும் அபராதம் விதிக்கப்படலாம். முன்னதாக பான் எண்ணுக்கு மட்டுமே அபராதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பரில் இருந்து பான் - ஆதார் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அபராதம் ஆதார் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கையா இருங்க
நீங்கள் பான் என்பதற்கு பதிலாக தவறான ஆதார் எண்ணைக் கொடுக்கிறீர்கள். அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் உங்கள் பான் அல்லது ஆதார் வழங்கத் தவறி விட்டீர்கள். அவ்வாறு இந்த அடையாளத்தை கொடுக்க தவறினால் இந்த அபராதமும் விதிக்கப்படும். இதனால் இனி மக்கள் உங்கள் பான் எண்ணையோ அல்லது ஆதார் எண்ணை கொடுக்கும் போது, மிகக் கவனமாக கொடுக்க வேண்டும்.