மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பாகப் பிரதான் மந்திரி சம்மன் நிதி அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6000 ரூபாய் அளவிலான தொகையை விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்படுகிறது.
இதுவரை 9 தவணைகள் மூலம் விவசாயிகளுக்குப் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மொத்தம் 18,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 10வது தவணையை மத்திய அரசு வழங்குவதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தற்போதைய பொருளாதார பிரச்சனைகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என நம்பப்படும் நிலையில், ஒய்வு காலத்தில் விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெறும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
பிரதமர் கிசான் மந்தன் யோஜனா
பிரதமர் கிசான் மந்தன் யோஜனா: இத்திட்டத்தின் கீழ் 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு முதலீட்டுத் திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்யப் பிஎம் கிஸ்சான் திட்ட வாடிக்கையாளர்கள் எவ்விதமான ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
விவசாயிகளுக்குப் பென்ஷன்
இத்திட்டத்தில் 18-40 வயதுடைய விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் வரையிலான பென்ஷன் தொகையை அவர்களுக்கு 60 வயதிற்குப் பின் பெற முடியும். ஆனால் இந்தப் பென்ஷன் தொகையைப் பெற மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
55 - 200 ரூபாய் வரை முதலீடு
பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் அனைவருக்குக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாதத்தில் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டின் மூலம் 60 வயதுக்குப் பின்பு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் பெற முடியும்.
3000 ரூபாய்
உதாரணமாகப் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் ஒருவர் 18 வயது முதல் மாதம் 200 ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்தால் 60 வயதிற்குப் பின் மாதம் 3000 ரூபாய் கிடைக்கும். இது வயது, முதலீட்டுத் தொகை மாறுபடும் போது பென்ஷன் தொகை அளவீடும் மாறும்.
துணைவியருக்கு 50% பென்ஷன்
அனைத்திற்கும் மேலாகப் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா கணக்கின் உரிமையாளர்கள் பென்ஷன் பெறும்போது அதாவது 60 வயதுக்கு மேல் உயிரிழந்தால் குறிப்பிட்ட பென்ஷன் தொகையில் 50 சதவீதம் அவருடைய துணைவியருக்கு கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்
பிஎம் கிஸ்சான் திட்டத்தில் இல்லாதவர்கள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றால் கீழ்க்கண்ட ஆவணங்கள் அவசியம்.
ஆதார் அட்டை
அடையாள அட்டை
வயது சான்றிதழ்
வருமான சான்றிதழ்
நில உரிமையை உறுதி செய்யும் பட்டா அல்லது சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
மொபைல் எண்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆகியவற்றைக் கொடுத்து பென்ஷன் அளிக்கும் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.