இந்தியாவில் சிறு மற்றும் குறு வர்த்தகர்களுக்குக் கடன் வழங்கும் பிரத்தியேக கடன் திட்டம் தான், இந்த முத்ரா கடன் திட்டம். இக்கடன் திட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் 50000 முதல் 10 லட்சம் வரையிலான தொகையை எவ்விதமான துணைஈடு அதாவது collateral இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் பிரதமர் மோடி பெயரில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் அளித்து வருகிறது.
தற்போது இந்தக் கடன் திட்டத்தின் கீழ் கொடுத்த கடன்கள் பெரும் பகுதி வாராக் கடனாக மாறியுள்ளது. ஏற்கனவே வங்கிகள் அதிகளவிலான வாராக் கடன் பிரச்சனையைச் சந்தித்து வரும் நிலையில் முத்ரா கடன் திட்டத்தின் வாராக் கடன் புதிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
முத்ரா கடன் திட்டம்
கொரோனா காலத்தில் பெரு நிறுவனங்களைக் காட்டிலும் சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் இவர்களின் வருமானம் மற்றும் வர்த்தகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் முத்ரா கடன் வாங்கியவர்களால் கடன் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் வாராக் கடன் அளவு மிகப்பெரிய அளவில் கடந்த ஒரு வருட காலத்தில் அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் அதிகப் பாதிப்பு
வங்கி தரப்புகள் கூறுகையில் தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகளில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வாராக் கடன் அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் மூலம் ஏற்பட்ட வர்த்தகம் பாதிப்புகள் தான். பல கோடி மக்களின் வருமானம் குறைந்த காரணத்தால் முத்ரா கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த முடியாமல் உள்ளனர்.
3 மடங்கு அதிகரிப்பு
2019-20 ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 2021 ஜூன் காலாண்டில் முத்ரா கடன் திட்டத்தின் வாராக் கடன் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது வங்கிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகவும், மிகப்பெரிய சுமையாகவும் மாறியுள்ளது என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
20 சதவீதம் வாராக் கடன்
2021 ஜூன் காலாண்டில் மொத்த முத்ரா கடனில் 20 சதவீதம் வாராக் கடனாக மாறியுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் இதன் அளவு வெறும் 6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொரோனா மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் காரணத்தால் வாராக் கடன் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
முக்கிய மாநிலங்கள்
உதாரணமாக மகாராஷ்டிராவில் எஸ்பிஐ வங்கியின் முத்ரா கடன் திட்டத்தில் 59 சதவீத கடன் வாராக் கடனாக மாறியுள்ளது. இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் கனரா வங்கியின் முத்ரா கடன் திட்டத்தில் மொத்த வாராக் கடன் அளவு 114.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் முத்ரா கடன் திட்டத்தில் பொதுத் துறை வங்கிகள் அளிக்கப்பட்ட மொத்த கடன் அளவில் வாராக் கடன் அளவு 26 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாக ஜூன் காலாண்டில் உயர்ந்துள்ளது. தனியார் அமைப்புகளையும் சேர்த்தால் 14.94 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த 24,850 கோடி ரூபாய் முத்ரா கடனில் 5,521 கோடி ரூபாய் கடன் வாராக் கடனாக உள்ளது.
டாப் 4 இடம்
முத்ரா கடனில் அதிக வாராக் கடன் வைத்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா 22 சதவீதம், ஜார்கண்ட் 9.29 சதவீதம், குஜராத் 6.64 சதவீதம், சட்டீஸ்கர் 9.80 சதவீதம் என டாப் 4 இடத்தைத் தத்தம் மாநிலங்கள் பிடித்துள்ளது. இதில் குஜராத் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தின் தரவுகள் மார்ச் மாதத்துடையது.
கடன் அளவுகள்
இந்தியா முழுவதும் 2020-21ஆம் நிதியாண்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி, நிதி நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து 3,11,754.47 கோடி ரூபாய்க் கடன் கொடுக்கப்பட்ட நிலையில், 2021-22 அதாவது நடப்பு நிதியாண்டில் கொரோனா தொற்றின் 2வது அலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் 75,925.76 அளவிலான கடன் கொடுக்கப்பட்டு உள்ளது.