மகாராஷ்டிரா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, ஆறு மாத காலத்திற்கு எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி செப்டம்பர் 2019ல் உத்தரவு பிறப்பித்ததோடு, அவ்வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவந்தது.
இந்த நடவடிக்கையானது இவ்வங்கி கடன்களை வழங்கியதிலும் வாராக் கடன்களை ரிசர்வ் வங்கியின் ஆய்விலிருந்து மறைப்பதிலும் பல முறைகேடுகளைச் செய்ததால் எடுக்கப்பட்டது.
இதனால் ஆரம்ப காலகட்டத்தில் பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில வாடிக்கையாளர்கள், பயத்தில் தங்களது பணம் என்னவாகுமோ என தற்கொலை செய்து கொண்டனர்.
கடும் கட்டுப்படுகள்
ஏனெனில் ஆரம்பத்தில் அவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் யாரும் 1,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என முதலில் உத்தரவிடப்பட்டது. ஆனால் இது பின்னர் இந்தத் தொகை 10,000 ரூபாயாகவும், பின்னர் 25,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியில், அவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் கடன் வாங்கி ஏப்பம் விட்ட ஹெச்டிஐஎல் நிறுவன முதலாளிகள் ராகேஷ் வாதவான், அவரது மகன் சாரங் வாதவான் ஆகிய கைது செய்து, அவர்களின் சொத்துகளையும் முடக்கம் செய்யப்பட்டது.
மோசடி செய்த ஹெச்டிஐஎல்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த வங்கி கொடுத்திருக்கும் 8,880 கோடி ரூபாய் கடனில், அடிக்கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஹெச்டிஐஎல் குழுமத்திற்குக் கொடுத்துள்ள கடன் மட்டும் 6,500 கோடி ரூபாய். அதாவது, மொத்தக் கடனில் 73 சதவீதம். இப்படி ஒரே நிறுவனத்திற்குக் வங்கி விதிமுறைகளுக்கு எதிராக கடன் கொடுத்துள்ளது இவ்வங்கி.
விதிமுறையை பின்பற்றியதே இல்லை
பிஎமசி வங்கியைப் பொருத்தவரை ஹெச்டிஐஎல் நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதில் எந்தவொரு விதிமுறையும் பின்பற்றப்பட்டதே கிடையாது. காரணம், இந்த வங்கியை மறைமுகமாக இயக்கி வந்ததே அந்த நிறுவனம் தான். குறிப்பாக இவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், ஹெச்டிஐஎல் நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு வரை அதன் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல, அந்நிறுவனத்திலும், அதன் குழும நிறுவனங்களிலும் பங்குதாரராகவும் இருந்திருக்கிறார்.
திவான் ஹவுஸிங்கும் சம்பந்தமா?
மேலும் ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் முதலாளியான ராகேஷ் வாதவானின் சகோதரரும், திவாலாகிவிட்ட திவான் ஹவுசிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான ராஜேஷ் வாதவானும் இவ்வங்கியின் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார்கள். ஹெச்டிஐஎல்.-க்கு அளிக்கப்பட்டிருக்கும் கடன்களுள் பெரும்பாலானவை பிஎம்சி வங்கியின் இயக்குநர்களுக்கே தெரியாமல் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மோசடிகள் மறைப்பு
இப்படி வழங்கப்பட்ட கடன்கள் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலும் மறைக்கப்பட்டு வரவு - செலவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள், 21,000-க்கும் அதிகமான போலி நிறுவனங்கள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தது போலக் காட்டப்படதும் தெரிய வந்தது.
பல ஆண்டு மோசடிகள்
கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துவந்திருக்கும் இம்மோசடிகள் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட எந்தவொரு அரசின் ஆய்விலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமானது. இதற்கிடையில் தற்போது சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி, வர்ஷா ராவத்துக்கு பிஎம்சி வங்கி மோசடி வழக்கில் இன்று நேரில் ஆஜராகுமாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பல முறை சம்மன்
இது வர்ஷாவுக்கு அனுப்பப்படும் மூன்றாவது சம்மன் ஆகும். ஏற்கனவே இரு முறை சம்மன் அனுப்பிய நிலையில், தனது உடல் நிலையை காரணம் காட்டி ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த முறையும் வர்ஷா ஜனவரி 5 வரை அவகாசம் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.