மத்திய அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் மூலம் 5.49 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாரக்கடனை மீட்டுள்ளதாக லோக் சபாவில் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்த நிலை, அதனை தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி,கொரோனா வைரஸ் பரவல், தற்போது ஓமிக்ரான் என இந்திய பொருளாதாரத்தினையும், பொருளாதார நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
இதற்கிடையில் பொதுத் துறை வங்கிகளின் வாரக்கடன் விகிதமும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாரக்கடன் மீட்பு நடவடிக்கை
இந்த நிலையில் தான், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், லோக் சபாவில் தனது எழுத்து பூர்வ பதிலில், வாரக்கடன் மீட்பு விகிதத்தினை, ரிசர்வ் வங்கி முறையாக வரையறுக்கவில்லை. வாரக்கடனை குறைப்பதற்கும், மீட்பை அதிகரிப்பதற்கும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
வாரக்கடன் மீட்பு
இதன் மூலம் தான் கடந்த ஏழு ஆண்டுகளில் 5,49,327 கோடி ரூபாய் வாரக்கடன் மீண்டுள்ளது. எப்படியிருப்பினும் ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன் மீட்பு விகிதமானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் 13.52% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 2017 - 18ம் ஆண்டின் தொடக்கத்தில் 11.33% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தாக்கம்
2019 - 20ம் நிதியாண்டில் இந்த மீட்பு விகிதமானது 14.69% ஆக அதிகரித்துள்ளது. எனினும் 2020 - 21ம் நிதியாண்டில் இந்த விகிதமானது கொரோனாவின் காரணமாக, நாடு தழுவிய லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி என பல காரணிகளினால் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரையில் இந்த விகிதமானது 12.28% ஆக உள்ளது.
வாரக்கடன் விகித நிலவரம்
பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாரக்கடன் விகிதமானது கடந்த மார்ச் 31, 2015 நிலவரப்படி, 2,79,016 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த விகிதமானது மார்ச் 31, 2018ல் 14.58% அதிகரித்து, 8,95,601 கோடி ரூபாயாக அதிகரித்தது. எனினும் அதன் பிறகு சற்று அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்த விகிதமானது மார்ச் 2021 நிலவரப்படி, 6,16,616 கோடி ரூபாயாக குறைந்தது.