இந்தியர்களுக்கு எப்போதுமே சினிமா மீது அதிகப்படியான ஈர்ப்பு உள்ளது, இதனாலேயே சமீபத்தில் இத்துறையில் பல நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. உதாரணமாகப் புக்மைஷோ, தியேட்டர் பிராண்டுகளான பிவிஆர், ஐநாக்ஸ் போன்றவை இந்தியா முழுக்கத் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்தது.
ஆனால் கொரோனா தொற்று மொத்தத்தையும் மாற்றியுள்ளது. கடந்த 2 வருடத்தில் கொரோனா தொற்றால் மத்திய மாநில அரசுகள் தியேட்டர்களை இயக்க தடை விதித்தது, இதனால் இத்துறை நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவை சந்தித்தது.
இந்த மோசமான நிலையைச் சமாளிக்க வேண்டும் என்றால் கட்டாயம் பெரும் மாற்றம் தேவை. இத்தகைய மாற்றம் தான் தற்போது உருவாகியுள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் சினிமா துறை மற்றும் தியேட்டர்கள் மத்தியில் இருக்கும் வர்த்தகத்தில் பெரிய அளவிலான அதிக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், கொரோனா தொற்றில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து மொத்தமாக மீண்டு வர வேண்டும் என்பதற்காகவும் போட்டியாளர்கள் கூட்டாளியாகி உள்ளனர்.
பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ்
இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனம் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்தவும், சந்தையில் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புத் திங்கட்கிழமை வெளியான நிலையில் இரு நிறுவனங்களின் பங்குகளும் 52 வார உயர்வை தொட்டது.
அஜய் பிஜிலி, சித்தார்த் ஜெயின்
இந்நிலையில் பிவிஆர் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் அஜய் பிஜிலி மற்றும் ஐநாக்ஸ் லீஷர் நிறுவனத்தின் இயக்குனர் சித்தார்த் ஜெயின் ஆகியோர் கூறுகையில் சினிமா தியேட்டர் துறையில் இந்தியாவில் இணைப்பு மற்றும் கைப்பற்றல் மிகவும் இயல்பான ஒன்று தான்.
வருவாய் மற்றும் லாப அளவு
கடந்த 2 வருடத்தில் வர்த்தகம் வருமானம் எதுவும் இல்லாத நிலையில், இரு நிறுவனங்களும் இணைந்து புதிய திட்டத்துடன், புதிய பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் இல்லாமல் வருவாய் மற்றும் லாப அளவுகளும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
பங்கு பிரிவு
பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைப்பிற்குப் பின்பு இக்கூட்டணி நிறுவனத்தில் ஐநாக்ஸ் ப்ரோமோட்டர்ஸ் 16 சதவீத பங்குகளையும், பிவிஆர் ப்ரோமோட்டர்ஸ் 10.5 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும். இதன் மூலம் நிர்வாகக் குழுவில் பெரிய அளவிலான ஆதிக்கம் செய்யாவிட்டாலும், தொடர்ந்து லாபகரமான வர்த்தகத்தை உருவாக்க முடியும்.
9500 தியேட்டர்கள்
இந்தியாவில் தற்போது 9500 தியேட்டர்கள் உள்ளது, இதில் 1500 தியேட்டர்கள் அல்லது திரைகள் தற்போது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் கூட்டணி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளது. அடுத்த 5 வருடத்தில், சுமார் 200 திரைகளை ஒவ்வொரு வருடமும் கைப்பற்றிப் புதிதாக 1000 முதல் 1200 திரைகளைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
10 வருடம்
இந்த இணைப்பு மூலம் அடுத்த 10 வருடத்தில் இந்திய சினிமா துறையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தையும் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் கூட்டணி செய்யும். இதேபோல் டிக்கெட் விற்பனையில் புக்மைஷோ ஆதிக்கம் செய்யும் நிலையில் மொத்த சினிமா துறையும் இவ்விரு நிறுவனங்கள் கைகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.