தங்கம் உலகிலேயே மதிப்பு வாய்ந்த ஒரு உலோகமாக தன்னை தக்க வைத்து கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவில் உலகில் தங்கம் இருப்பது தான் தொடர்ந்து அதற்கான தேவை நீடிக்க முக்கிய காரணம். பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டில் பூமிக்கடியில் தங்கம் இருக்கிறதா என்பதை கண்டறியும் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கம் கொட்டி கிடக்கிறது. அவற்றை கண்டுபிடிக்கும் புவியியல் ஆய்வு பணிகள் ஒரு புறம் நடக்கும் நிலையில் , ஏற்கனவே மூடப்பட்ட தங்க சுரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராமகிரி தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஆந்திர மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சுமார் 25 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்த சுரங்கங்களில், மீண்டும் தங்கம் எடுக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. ஆந்திர மாநில அரசு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லண்டனை சேர்ந்த ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் நிறுவனத்தால் ராமகிரியில் தங்க சுரங்கம் அமைக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (BGML) நிறுவனம் 1982 முதல் 2001 வரை இந்த தங்க சுரங்கங்களை நிர்வகித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் 2001-ம் ஆண்டு சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டு முழுமையாக மூடப்பட்டது.
ராமகிரி கிரீன்ஸ்டோன் பெல்ட்டில் அமைந்துள்ள இந்த சுரங்கங்கள், 13 கி.மீ நீளமுள்ள கனிம மண்டலத்தை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வின்படி, இந்த பகுதியில் சுமார் 11.4 லட்சம் டன் தாதுப்பொருள் உள்ளது. இதில் ஒரு டன் தாதுப்பொருள் சராசரியாக 4 கிராம் தங்கம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 9.1 டன் தங்கம் எடுக்க முடியுமாம்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஆய்வுகளில், இந்த ராமகிரி தங்க மண்டலம் சுமார் 150 கி.மீ தூரம் வரை தங்க இருப்பை கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நவீன சுரங்க தொழில்நுட்பங்கள் முன்னேறியுள்ளதால், முன்பு லாபமற்றது என கருதப்பட்ட குறைந்த தரத்திலான தாதுக்களிலிருந்தும் இப்போது தங்கம் எடுக்க முடியும் என்பதால் ஆந்திர அரசு இந்த சுரங்கத்துக்கு உயிர் கொடுக்க தயாராகி வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஆண்டு இறுதி முதல் அதிகரித்தது, உலகளவில் தங்கத்தின் டிமாண்ட் அதிகமாகவே இருப்பது ஆகிய காரணங்களால் ராமகிரி தங்க சுரங்க திட்டம் வணிக ரீதியாக லாபகரமாக இருக்கும் என ஆந்திர அரசு நம்புகிறது.மேலும் முந்தைய சுரங்க பணிகளின் போது வெளியேற்றப்பட்ட கழிவுகளில் இன்னும் கணிசமான அளவு தங்கம் இருப்பதாக கருதப்படுகிறது. சுமார் 4.16 லட்சம் டன் எடையுள்ள இந்த கழிவு குவியல்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்க முடியும் என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே இந்த சுரங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர இங்குள்ள உள்கட்டமைப்புகளை, அரசு அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். அண்மையில் ஜொன்னகிரி தங்க சுரங்கத்தில் வணிக ரீதியான பணிகள் தொடங்கியுள்ளதை அடுத்து, ராமகிரி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள தங்க சுரங்கங்களை கூட்டு உரிமங்களின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.ஆந்திர சுரங்கத்துறை அமைச்சர் கொல்லு ரவீந்திரா நேரடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்திருப்பதும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதும் இந்த திட்டத்தை இன்னும் வேகப்படுத்தியுள்ளது.
இந்தியா தனக்கு தேவையான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இதனால் சர்வதேச பொருளாதாரம், போர் சூழல்கள் இந்திய சந்தையிலும் தங்கம் விலையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன. அதற்கு மாறாக இந்தியாவிலேயே தங்கம் உற்பத்தி செய்யும் போது குறைந்த விலைக்கே தங்க கட்டிகள் நகை உற்பத்தியாளர்களுக்கு குறையும். இதன் விளைவாக தங்கம் விலையும் குறையும் வாய்ப்பு உண்டாகும்.


Click it and Unblock the Notifications


