டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, மும்பையில் வேகமாக வளர்ந்து வரும் பார்மா ஸ்டார்ட் அப் நிறுவனமான Generic Aadhar-இல் முதலீடு செய்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்தப் பார்மஸி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைவர் அர்ஜுன் தேஷ்பான்டே-வின் வயது வெறும் 18 வயது தான்.
ஒரு 18 வயது சிறுவன் நடத்தும் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்யும் அளவிற்கு இந்த நிறுவனத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்..?
Generic Aadhar நிறுவனம்
பார்மஸி நிறுவனமான Generic Aadhar மற்ற கடைகளா காட்டிலும் சற்று வித்தியாசமானவை. இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பார்மஸி aggregator அதாவது ஒன்றிணைக்கும் வர்த்தக வடிவத்தைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் generic மருந்துகளை நேரடியாக உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வாங்கி, ரீடைல் பார்மஸி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சந்தை விலையை விடவும் சுமாராக 20 - 30 % வரை குறைவான விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.
6 கோடி ரூபாய்
தற்போது Generic Aadhar நிறுவனம் மும்பை, நகரத்தில் மட்டும் தொடர்ச் சங்கிலி கடைகளாக profit-sharing முறையில், ஃபிரான்சைஸ் மாடலில் 35 மருந்துக் கடைகளை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் ஆண்டுக்கு சுமாரராக 6 கோடி ரூபாய் வருமானத்தை பார்த்துள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனை மற்றும் போட்டியின் காரணமாக மோசமான வர்த்தகத்தைச் சந்தித்து வரும் மருந்துக்கடைகளைத் தேடிப் பிடித்து Generic Aadhar தனது நிறுவனத்தில் சேர்ந்து வருகிறது.
ரத்தன் டாடா
தற்போது Generic Aadhar நிறுவனத்தில் ரத்தன் டாடா செய்யும் முதலீடு தனது சொந்த முதலீடாகும். இது எவ்விதத்திலும் டாடா குழுமத்திற்குத் தொடர்புடையது இல்லை. இதே போன்று ரத்தன் டாடா தனது சொந்த முதலீட்டின் வாயிலாக ஓலா, பேடிஎம், ஸ்னாப்டீல், க்யூர்பிட், அர்பன் லேடர், லென்ஸ்கார்ட் போன்ற பல முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ரத்தன் டாடாவின் தொடர் முதலீடுகள் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளராகப் பார்க்கப்படுகிறார்.
1000 கிளைகள்
ரத்தன் டாடாவின் இப்புதிய முதலீடு மூலம் Generic Aadhar நிறுவனம் அடுத்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் தற்போது இருக்கும் 35 ஃபிரான்சைஸ் கிளைகளை 1000 கிளைகளாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளார் அர்ஜுன் தேஷ்பான்டே. இந்த அடுத்தகட்ட விரிவாக்கத்தில் குஜராத், ஆந்திரா பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் முக்கிய இலக்காக உள்ளது.


Click it and Unblock the Notifications