தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைப்பதற்கான முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது ரேஷன் கார்டு. மானிய விலையிலும் இலவசமாகவும் ரேஷனில் பொருட்களை வாங்கிக் கொள்ளவும், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டு தான் அடிப்படை ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.
நம்முடைய ரேஷன் கார்டில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை அப்டேட்டாக வைத்திருந்தால் தான் அரசின் நலத்திட்டங்கள் நமக்கு தடையின்றி கிடைக்கும். இலவச அரிசி ஆகியவற்றை தொடர்ந்து பெறவும் நம் தகவல்களை அப்டேட் செய்து கேஒய்சி புதுபிப்பது நல்லது. ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்யவும் மக்களின் புகார்களுக்கு தீர்வு காணவும் ஒவ்வொரு மாதமும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் இந்த மாதம் முதல் வழக்கம் போல நடத்தப்படும். அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை அதாவது 13ஆம் தேதி நடக்க இருக்கிறது . எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு சென்று தங்களுடைய ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, முகவரி மாற்றம் ,கைபேசி எண் அல்லது பதிவு மாற்றம் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் இந்த முகாமில் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக ரேஷன் கார்டு பெறவும் விண்ணப்பம் செய்யலாம்.
இது தவிர ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொருள் பெற முடியாத மாற்றுத்திறன் நபர்களுக்கான அங்கீகார சான்று இந்த குறை தீர்ப்பு முகாம்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றையும் இந்த முகாம்கள் வாயிலாக மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை போலவே அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் கேஒய்சி அப்டேட் செய்து கொள்வது கட்டாயம் என்பதால் மக்கள் இந்த குறை தீர்ப்பு முகாம்களில் அவற்றையும் முடித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வழக்கமான நாட்களில் ரேஷன் கார்டு திருத்தங்கள் மேற்கொள்ள நாம் வேலைக்கு லீவு போட்டு செல்ல வேண்டும் ஒரே நாளில் வேலை முடியுமா என்றால் சந்தேகம் தான். ஆனால் இந்த முகாமிற்கு சென்றால் ஒரே நாளிலேயே வேலை முடிந்துவிடும். மேலும் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications

