இந்திய வங்கிகள் மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு தற்போது தான் மீண்டு வந்து கொண்டுள்ளன எனலாம். எனினும் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று வங்கித் துறை.
சொல்லப்போனால் மிகப்பெரிய அழுத்தத்தில் காணப்பட்ட வங்கிகள் தற்போது தான் மீளத் தொடங்கியுள்ளன.
எனினும் தற்போது மீண்டும் ஓமிக்ரான் அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி வங்கிகளின் பைனான்ஷியல் ஸ்டெபிலிடி (Financial Stability) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாராக்கடன் அதிகரிக்கலாம்
இது உண்மையில் இந்திய வங்கிகளின் எதிர்காலம் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது குறித்த அறிக்கையில் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பானது செப்டம்பர் 2021ல் 6.9% அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் 2022ல் 8.1% ஆக அதிகரிக்கலாம். இது கடுமையான அழுத்த நிலைகளில் 9.5%ஆக கூட அதிகரிக்கலாம் என ஆர்பிஐ-ன் நிதி நிலை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
போதுமான மூலதனம்
எப்படியிருப்பினும் கமர்ஷியல் வங்கிகள், சவாலான காலகட்டத்திலும், போதுமான மூலதனத்தினை கொண்டிருக்கும் என இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. ஆண்டுக்கு ஓரிரு முறை இந்திய வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது இந்த அறிக்கையை வெளியிட்டு வருகின்றது.
இந்திய வங்கிகள் குறித்த கவலை
இந்த அறிக்கையானது இந்திய வங்கிகளின் பலம் என்ன, பலவீனம் என்ன? பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை தெளிவாக சுட்டிக் காட்டும். இந்த அறிக்கையில் தான் தற்போது இந்திய வங்கிகளின் வாராக்கடன் விகிதமானது அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. இது இந்திய வங்கிகளின் நிதி நிலை குறித்தான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்
தற்போது இரண்டாம் அலையில் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், ஒமிக்ரான் அச்சம் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு வளர்ச்சியினை மெதுவாக்கலாம். இது வாராக்கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். மேலும் மேற்கொண்டு அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் என்பது மேலும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்திய வங்கிகளின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.